Edappadi Palanisamy : பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை.. ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம்.. எடப்பாடி பழனிச்சாமி காட்டம்
ஒரு பெண் உதவி ஆய்வாளர், இரண்டு மளிகைக் கடை மற்றும் உணவகத்தில் இருந்த மகளிர்கள், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், இருசக்கர வாகனத்தில் பயணித்தோர் என்று அனைவரும் தங்களது நகைகளை பறிகொடுத்திருப்பது, இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நேற்று ஒரே நாளில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேரிடம் நகைப் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைநகரில் நடந்துள்ள இந்த நகை பறிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை தாண்டி பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை.. ஒரு பெண் உதவி ஆய்வாளர், இரண்டு மளிகைக் கடை மற்றும் உணவகத்தில் இருந்த மகளிர்கள், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், இருசக்கர வாகனத்தில் பயணித்தோர் என்று அனைவரும் தங்களது நகைகளை பறிகொடுத்திருப்பது, இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது என பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் பாதிப்பு
"விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது.
நேற்று ஒரே நாளில் சென்னை தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் நகைப் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
