Paramakudi: 78 ஆண்டுகளாக பாசன வசதி இல்லாத கிராமங்கள்.. சுதந்திரம் கிடைத்தும் நீர் கிடைக்கவில்லை!
சுமார் 2500 ஏக்கர் பாசன வசதி கொண்ட இந்த கண்மாய்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும் அரசு நிர்வாகம் நிரந்தர பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

பரமக்குடி வட்டத்தில் மானாவாரி கண்மாய்கள் நேரில் கள ஆய்வு செய்த விவசாயிகள், நிரந்தர பாசன வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் தடுத்தலான் கோட்டை, செம்பிலான்குடி, குறிஞ்சாக்குளம், வேப்பங்குளம், ஆகிய நான்கு பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் உண்டுபத்தி, கூனங்குளம், பீர்க்கன் குறிச்சி, இடையன்குளம் ஆகிய நான்கு மைனர் கண்மாய்கள், ஆக மொத்தம் எட்டு கண்மாய்கள் மழையை நம்பி வானம் பார்த்த பூமியாக மானாவாரி கண்மாய்களாக இருந்து வருகின்றன.
கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி
சுமார் 2500 ஏக்கர் பாசன வசதி கொண்ட இந்த கண்மாய்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும் அரசு நிர்வாகம் நிரந்தர பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இன்று 13-4-2025 காலை இந்தக் கண்மாய்கள் இதற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு உரிய வழிகள் குறித்து நேரில் சென்று கள ஆய்வு செய்யப்பட்டது.
வான்பார்த்த பூமியாக, மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்கிற சூழலில், அங்குள்ள விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் தவித்து வருகின்றனர். இவர்களுக்கான எந்த பாசன வசதியும் இல்லாத நிலையில், ஒவ்வொரு முறையும் மழையை மட்டுமே நம்பி, விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஆய்வு, அங்கு பல ஆண்டுகளாக நிலவி வந்த மோசமான சூழலை, வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
நீர்வளத்துறையில் முறையிட முடிவு
காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முகவை மு மலைச்சாமி, தடுத்தலான் கோட்டை கிராமம் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன், ஓய்வு பெற்ற பி டி ஓ பெரியவர் காளிமுத்து, வே.முருகேசன், ஆ.ஜெயபாண்டியன் மற்றும் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நீர் வளத்துறை மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் அவர்களை நேரில் சென்று சந்தித்து நிரந்தர பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தி முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

டாபிக்ஸ்