AIADMK Case : அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதன் காரணமாக அதிமுக பொது குழு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இவ்வழக்கின் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்ற வேண்டுமென ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக இவ்வழக்கில் இருந்து தாமாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க தற்போது நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஆகஸ்டு 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்கள் விசாரிக்கபட்டது.
பொதுக்குழு குறித்து ஜூன் 23ஆம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியானதால், தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது.
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இபிஎஸ் தரப்பு, 2017ஆம் ஆண்டு நியமனத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் கூறியது.
இரண்டாயிரத்து 432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக, கடிதம் வழங்கியுள்ளதாகவும் இபிஎஸ் தரப்பு வாதிட்டது. ஜூன் 23ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், பதவிகள் காலாவதியாகிவிடும் என எந்த தீர்மானத்திலும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. வழக்கின் விசாரணை முடிந்த பிறகு தேதி குறிப்பிடாமல் நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பு தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.