‘ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு ஆச்சு.. வாக்குறுதிகளை நிறைவேத்துங்க..’ மார்க்சிஸ்ட் கட்சி சூடான அறிக்கை!
‘அறிவிப்புகள் ஏதும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’
‘தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கவனம் செலுத்திட வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக அவருடைய எக்ஸ் தள பக்கத்தில், சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘‘தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களையும், அதன் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தாலும், நிறைவேற்றப்படாத பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டுமென பெரும் எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
கட்டண உயர்வுகளை திரும்ப பெற வேண்டும்
குறிப்பாக, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். சிறு-குறு தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்புகளை காரணம் காட்டி ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
ஏமாற்றம் அளிக்கிறது
கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். அதுபோல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த அறிவிப்புகள் ஏதும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,’
என்று அந்த அறிக்கையில் பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார். இன்றைய சட்டமன்ற நிகழ்வில், திமுக அரசு ஆதாரவாக விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் செயல்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை நேரடியாக திமுக அரசின் ஆளுநர் உரையை கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணிக்குள் புகையும் நெருப்பு
சமீபத்தில் திமுக அரசை குறிப்பிட்டு, முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக சாடியதும், அதன் பின் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து, கடுமையான தலையங்கம் எழுதப்பட்டதும், திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன் பின், இரு தரப்பும் பரஸ்பரம் சமரசம் ஆனார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், புதிய மாநில செயலாளரான பெ.சண்முகம், தமிழக அரசின் இன்றைய ஆளுநர் உரையை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது திமுக கூட்டணியின் புகைச்சலை மேலும் அதிகரித்துள்ளது.