Madurai hc: கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது - நீதிமன்றம்
மதுரை: கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்கும் இடமாக பயன்படுத்துவதை தடுக்கக் கோரிய வழக்கில் இந்த கருத்தை கூறியுள்ளனர்.
திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி.நாராயணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்செந்தூர் கோயிலுக்கு விழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அப்போது ஏற்படும் நெரிசலால் பக்தர்கள் ஓய்வெடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் சிரமப்படுகின்றனர். எனவே, மூவர் ஜீவ சமாதி அருகே கோயிலுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலம் (சர்வே எண்- 180) உள்ளது. அந்த இடத்தில் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் சடலங்களை புதைக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இடுகாட்டுக்கு வேறு இடம் ஒதுக்கவும், கோயில் இடத்தை பக்தர்கள் ஓய்வெடுக்கவும், வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது. கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோயில் இடத்தை மீட்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியருக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் வருவாய் அதிகாரிகள் கோயில் நிலத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வருவாய் அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மனுதாரரின் மனுவை 3 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என உத்தரவிட்டனர்.
டாபிக்ஸ்