டாஸ்மாக் முறைகேடு: ‘ED விசாரணையில் அரசியல் உள்நோக்கமா? அதை ஆராய முடியாது..’ நீதிபதிகள் உத்தரவில் சொன்னது என்ன?
‘இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், அரசியல் நோக்கம் உள்ளது, ஆனால் நீதிமன்றம் அதை ஆராய முடியுமா? நிச்சயமாக இல்லை. அது நீதிமன்றத்தின் கடமை அல்ல’

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிரான தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தொடர்ந்த வழக்கின் மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கி அமர்வு இன்று அளித்த உத்தரவில் கூறியதாவது:
நீதிமன்ற அமர்வின் உத்தரவில் கூறியது என்ன?
‘‘பணமோசடி என்பது பொருளாதார நீதிக்கு எதிராக சமன்படுத்தப்படும்போது, அது நடைமுறையில் உள்ள சில சிரமங்களுக்கு எதிரான குற்றமாகும். இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், விசாரணையில் அரசியல் நோக்கம் உள்ளது என்பதாகும். ஆனால் நீதிமன்றம் அதை ஆராய முடியுமா? நிச்சயமாக இல்லை. அது நீதிமன்றத்தின் கடமையும் அல்ல. இந்த சமர்ப்பிப்பை வைக்க சரியான இடம், மக்கள் முன் உள்ளது. இறுதியில் மிக முக்கியமானது மக்களின் விருப்பம். சோதனைகள் மற்றும் திடீர் சோதனைகளின் போது, தகவல் கசிவைத் தடுக்க ஊழியர்கள் வளாகத்திற்குள் தடுத்து வைக்கப்படுவது நடைமுறைக்குரிய விஷயம். சோதனை நடவடிக்கையின் போது அமலாக்கத்துறையால் ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டதாக டாஸ்மாக் முன்வைத்த வாதத்தை நிராகரிக்கிறோம். எனவே விசாரணையைத் தொடர அமலாக்கத்துறைக்கு(ED) நீதிமன்றம் சுதந்திரம் அளிக்கிறது,’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டாஸ்மாக் வழக்கு தொடர்பான விபரம்
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 கோரிக்கைளை வலிறுத்தி டாஸ்மாக் நிறுவனம் சார்பிலும், அரசு சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதற்கிடையில், வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும், டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து விலகியதாக அறிவித்தனர்.
வேறு அமர்வுக்கு வழக்கு மாற்றம்
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. கடந்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு அடிப்படை காரணங்களுக்காக அது தாமதமானது. இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு ஆறு வெவ்வேறு நிவாரணங்களைக் கோரி ஒரு திருத்த மனுவை தாக்கல் செய்துள்ளது என்று அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமன் கூறினர்.
தமிழக அரசின் அசல் வேண்டுதல் என்ன என்று நீதிபதி சுப்பிரமணியம் அவரிடம் கேட்டார். அது மிகவும் விரிவானது என்றும், அதனால்தான் அரசு திருத்த மனுவை தாக்கல் செய்துள்ளது என்றும் அப்போது ஏஜி பதிலளித்தார். அமலாக்கத்துறையின் பிஎம்எல்ஏ தொடர்பான பிரபலமான விஜய் மதன்லால் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும் அப்போது ராமன் கூறினார்.
அமலாக்கத் துறை போல போலீஸ் விசாரிப்பதில்லையா? நீதிபதி கேள்வி
டாஸ்மாக் பெண் ஊழியர்களை நள்ளிரவு வரை காவலில் வைத்து அவர்களின் மனித உரிமைகளை மீறியதன் மூலம் தான், அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதாக நீதிபதியிடம் ராமன் புகார் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுப்பிரமணியன், தமிழ்நாடு காவல்துறை இதுபோன்ற சோதனைகளை நடத்துவதில்லையா? என்று ஏஜி ராமனிடம் கேட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். முரளிதரன், டாஸ்மாக் தொடர்பாக ஆர்வலர் ஒருவரின் குற்றச்சாட்டை முன்வைக்கும் மனுவை தாக்கல் செய்வதாகக் அவர் கூறினார். மேலும் சிஏஜி அறிக்கையின் படி, டாஸ்மாக்கில் மிகப்பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட அட்வகேட் ஜெனரல் ராமன், இந்த மனுவை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறினார்.
அப்போது நீதிபதி சுப்பிரமணியம், ஆனால் நாம் இன்னும் அவரை நிறைய கேட்க வேண்டியிருக்கிறது. அவரது மனுவை தள்ளுபடி செய்தாலும், நாம் அவரைக் கேட்க வேண்டும். இது தொடர்பாக அனைவரையும் கேட்போம் என்று கூறினார்.
அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களும்.. முடிவும்
டாஸ்மாக்கின் ரிட் மனுக்களுக்கு ED பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக ED சிறப்பு அரசு வழக்கறிஞர் N. ரமேஷ் உதவியுடன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் கூறினார். கவுண்டருக்கு மறுப்பு மனு தாக்கல் செய்ய ஏஜி ராமன் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. நீதிபதிகள் ஏப்ரல் 8ம் தேதி வரை அதற்கான அவகாசம் வழங்க ஒப்புக் கொண்டனர். மேலும் விசாரணையை ஏப்ரல் 8, 2025 அன்று ஒத்திவைத்தனர்.
இதற்கிடையில் நீதிபதிகள் அமர்வை மாற்றக் கோரி அரசு தரப்பில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதை சம்மந்தப்பட்ட அமர்வில் முறையிடுமாறு தலைமை நீதிபதி கூறிதால், இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற விசாரணையில் தீர்வு காணுமாறு கூறியது. இதைத் தொடர்ந்து மீண்டும் உயர்நீதிமன்றம் வந்த தமிழ்நாடு அரசுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். குறைந்த பட்ச நேர்மை கூட இல்லை என்று அரசுக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தினர். இப்படி பல்வேறு பரபரப்பான சூழலுக்குப் பிறகு, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
