Top 10 News:சிதம்பரம் கோயிலில் புதிய கொடிமரத்திற்கு எதிர்ப்பு முதல்கோவை வந்த முதலமைச்சர் வரை! இன்றைய டாப் 10 தமிழ்நாடு!
தமிழ்நாட்டில் இன்று (05/11/2024) நண்பகல் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை டாப் 10 செய்திகளாக இங்கு காண்போம்.

சிதம்பரம் கோயிலில் புதிய கொடிமரத்திற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் தற்போது சன்னதியில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயில் கொடி மரத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தில்லை கோவிந்தராஜரின் பக்தர் ஹரிஹரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நடிகை கஸ்தூரி மீது காவல் நிலையத்தில் புகார்: பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாக சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை சென்ற முதலமைச்சர்: தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக கள ஆய்வு மேள்கொள்ள உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முதற்கட்டமாக கோவை சென்றுள்ளார். இந்நிலையில் இன்று தொடர்ந்து கோவை விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை முதல்வர் திறக்க இருக்கிறார். எல்காட் நிறுவனம் சார்பில் 114.16 கோடி ரூபாயில் எட்டு தளங்களுடன் 3.94 ஏக்கரில் தொழில்நுட்பப் பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார். ஆட்சியர் அலுவலகத்தில் தங்க நகை தொழில் அமைப்பை நிர்வாகிகளுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார். வீட்டுவசதி வாரிய நில எடுப்பில் இருந்து விடுவித்த நிலங்களில் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்குகிறார்.
