தமிழகத்தை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! 6 மாவட்டங்களின் இன்று முதல் கனமழை எச்சரிக்கை!
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-12-2024) காலை 0830 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
இன்றைய தினம் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.