PM Modi: ’தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கிறது!’ பல்லடத்தில் நரேந்திர மோடி ஆவேசம்!
“தமிழகம் தேசியத்தின் பக்கள் நிற்கும் மாநிலம் என்பது இந்த கூட்டம் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது”
![திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி](https://images.hindustantimes.com/tamil/img/2024/02/27/550x309/2402024_TPR_MODDI_1709030838843_1709030845527.png)
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தொழில்துறையில் முக்கிய பங்காற்றும் மண்ணாக கொங்கு மண் உள்ளது. ஜவுளி மற்றும் தொழில்துறையில் பல்லடம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகம் தேசியத்தின் பக்கள் நிற்கும் மாநிலம் என்பது இந்த கூட்டம் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. தமிழ்நாடு வரும் 2024ஆம் ஆண்டு புதிய சரித்திரத்தை படைக்க உள்ளது. அதற்கு முன்னோடியாக என் மண் என் மக்கள் யாத்திரை நடந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த யாத்திரைக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்துள்ளீர்கள்.
என் மண் என் மக்கள் யாத்திரை ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும், மண்ணுக்கும் உள்ள தொடர்பை காட்டுவதாக உள்ளது. இந்த யாத்திரையை தலைமை தாங்கி நடத்தும் ஆற்றல் மிக்க அண்ணாமலைக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைவருக்குமான வளர்ச்சியை எல்லா வீடுகளுக்கும் சென்று சேர்த்து உள்ளார்.
பல ஆண்டு காலமாக தமிழ் மண்ணோடு பின்னி பினைந்துள்ளேன். 1991ஆம் ஆண்டு ஏக்தாத் யாத்திரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தது. அதை நான் வழிநடத்தி சென்றேன். அங்கே காஷ்மீரில் உள்ள லால்சவுக்கில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும், 370 சட்டத்தை ரத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. காஷ்மீரின் லால்சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளோம். தற்போது 370 சட்டத்தை ரத்து செய்து குப்பையில் எறிந்துள்ளோம். அதே போல் என் மண் என் மக்கள் யாத்திரை புதிய பாதையில் கொண்டு சென்று உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக என்றைக்கும் ஆட்சியில் இருந்தது இல்லை; ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இதயத்தில் பாஜக் உள்ளது. பல ஆண்டு காலமாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள் பாஜகவின் பலத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக மக்களை திசைத்திருப்பி நாற்காலியை காப்பாற்ற முயல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள் என்பது அத்தனை பேருக்கும் தெரியும், ஆகவே இவர்களின் கபடநாடகம் வெளியே வந்துவிட்டது. அதனால் தமிழக மக்கள் பாஜகவை நம்பத் தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாஜக முன்னுரிமை தருகிறது. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இருந்த மத்திய அரசு கொடுத்த பணத்தை விட மூன்று மடங்கு அதிக பணத்தை மத்திய பாஜக அரசு கொடுத்துள்ளது. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை, அவர்களுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எந்த பங்கும் இல்லை.
மோடி அத்தனை ஏழைகளுக்காகவும் வேலை செய்து கொண்டிருக்கிறார், அதனால்தான் நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் மோடி உத்தரவாதம் என்று சொன்னால் 3.5 கோடி மக்களுக்கு அரிசி தருகிறோம், 40 லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுத்துள்ளோம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடு கட்டி கொடுத்துள்ளோம். ஆகவே மோடி கேரண்டி என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)