’முன்கூட்டியே வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்! எந்த இணையதளத்தில் பார்ப்பது!’ முழு விவரம் இதோ!
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,02,568 மாணவர்கள் எழுதினர்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன் கூட்டியே மே 8ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,02,568 மாணவர்கள் எழுதினர். இதில் 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகளும் அடங்குவர். தேர்வு மொத்தம் 3,316 மையங்களில் நடத்தப்பட்டது. 7,518 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர். முதல் நாள் தமிழ் தேர்வில் 11,430 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:15 மணி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கின. மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் இப்பணி நடைபெற்று வருகிறது.
"மே 8 அன்று காலை 9 மணிக்கு முடிவுகள்"
மே 9 அன்று வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், தற்போது ஒரு நாள் முன்னதாக மே 8 அன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தி உள்ளது. இதற்காக, தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்ததாகவும், மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தங்களது முடிவுகளை dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி பார்க்கலாம்.
"மாணவர்களின் உயர்கல்விக்கு வாய்ப்பு"
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, "மாணவர்கள் அடுத்த கட்ட உயர்கல்வியைத் தேர்வு செய்வதற்கு இந்த முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் மற்றும் பிற பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது பாதையைத் தெளிவாகத் திட்டமிடுவதற்கு இந்த முன்கூட்டிய வெளியீடு உதவிகரமாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். "தமிழகத்தில் உயர்கல்வியைத் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது" எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

டாபிக்ஸ்