Kallakurichi liquor death: கள்ளக்குறிச்சி மரண ஓலம்! தமிழ்நாடு சட்டப்பேரவை இரங்கல்! முதல்வர் உத்தரவை சொன்ன அப்பாவு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சி மரண ஓலம்! தமிழ்நாடு சட்டப்பேரவை இரங்கல்! முதல்வர் உத்தரவை சொன்ன அப்பாவு!

Kallakurichi liquor death: கள்ளக்குறிச்சி மரண ஓலம்! தமிழ்நாடு சட்டப்பேரவை இரங்கல்! முதல்வர் உத்தரவை சொன்ன அப்பாவு!

Kathiravan V HT Tamil
Published Jun 20, 2024 10:36 AM IST

Kallakurichi liquor deaths: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 35 பேர் வரை உயிரிழந்து உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்று உள்ளதால் இன்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

Kallakurichi liquor death: கள்ளக்குறிச்சி மரண ஓலம்! தமிழ்நாடு சட்டப்பேரவை இரங்கல்!
Kallakurichi liquor death: கள்ளக்குறிச்சி மரண ஓலம்! தமிழ்நாடு சட்டப்பேரவை இரங்கல்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 

இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. இக்கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.மாணிக்கராஜ், இ.ரவிக்குமார், டாக்டர் வி.தனராஜ், வ.சின்னசாமி, டாக்டர் ஏ.ராமகிருஷ்ணன், அ.கணேச மூர்த்தி, சு.சிவராமன், ச.வேணு கோபால், அ.கு.சி. அன்பழகன், இராம. வீரப்பன், ரா. இந்திரகுமாரி, ஹெ.எம். ராஜூ, சி.வேலாயுதன், த.மலரவன், த.ராசம்மாள், மோ.பரமசிவம், சி.ராமநாதன் உள்ளிட்டோர் மறைந்தது குறித்து சட்டப் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு இரங்கல் 

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  2021ஆம் ஆண்டில் விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து தேர்வாகி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி அன்று உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணம் குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

இரங்கல் குறிப்பை வாசித்த சபாநாயகர் அப்பாவு, “கள்ளச்சாராய விவகாரத்தில் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்” என தெரிவித்தார். 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 35 பேர் வரை உயிரிழந்து உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்று உள்ளதால் இன்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண ஓலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 116 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றிரவு 16 ஆக இருந்த நிலையில், தற்போது 35 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

விசாரணை அதிகாரி நியமனம்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு தலைமையில், விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.