Madurai: ’டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடிய 11,608 பேர் மீதான வழக்குகள் வாபஸ்!’ தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023 ன் கீழ் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளன.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், டங்ஸ்டன் சுரங்க அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரியும், நரசிங்கம்பட்டி முதல் மதுரை வரை கடந்த ஜனவரி 7ஆம் தேதி அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நடைபயணமாக சென்றனர்.
மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் !
தமிழகத்தின் முதல் பல்லுயிர் மரபுச் சின்னமான அரிட்டாபட்டிக்கு அருகில் உள்ள 10 கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை மத்திய சுரங்க அமைச்சகம் நவம்பர் 7ஆம் தேதி வழங்கியதை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்காவில் உள்ள பல கிராமங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (HZL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய சுரங்க அமைச்சகத்திற்கு தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் நவம்பர் 29 அன்று கடிதம் எழுதியிருந்தார். சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மத்தியத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மோடியை வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியில் டங்ஸ்டன் மற்றும் ஆந்திராவின் பலேபாளையம் டங்ஸ்டன் மற்றும் அதனுடன் தொடர்புடைய கனிம தொகுதி ஆகியவற்றில் சுரங்கம் தோண்டுவதற்கான ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் நவம்பர் 7 அன்று பெற்றதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
வழக்குகள் வாபஸ்
இந்த நிலையில் அனுமதியின்றி பேரணியாக சென்ற மக்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு இருந்தன. அதனை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை ஒன்றிய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதி அளித்து, இந்த திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமரை வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதினார். மேலும் இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 09.12.2024 அன்று ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மக்களின் உணர்வுக்கும் தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக, இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது.
இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்கள். இதன்படி, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023 ன் கீழ் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளன.
