’இந்திய நிலப்பரப்பில் 4%, மக்கள் தொகையில் 6% ஜிடிபியில் 9%’ தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
இந்தியாவின் நிலப்பரப்பில் 4%, நாட்டின் மக்கள்தொகையில் 6% மட்டுமே கொண்டிருக்கும் தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24இல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை வெளியிடப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடுத்த ஓராண்டுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கம் விதமாக மாநில திட்டக் குழு தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-
2024-25இல், பொருளாதார வளர்ச்சிப் போக்கைப் பாதிக்கும் உலக அளவிலான சவால்களை, தமிழ்நாட்டுப் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலுடன் எதிர்கொண்டது. பெருந்தொற்றோடு சர்வதேச அரசியல் பதற்றங்களும் தீவிரமான தட்பவெப்ப மாற்றங்களும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளைப் பாதித்ததுடன் எரிசக்தி, உணவுத் துறை ஆகியவற்றில் நெருக்கடிகளை விளைவித்தன. 2023இல் உலகப் பொருளாதாரம் 3.33% உண்மை வளர்ச்சி நிலையை அடைந்தது. இந்தியப் பொருளாதாரம் 2022-23இல் 7.61%, 2023-24இல் 9.19%, 2024-25இல் 6.48% வளர்ச்சியை எட்டியது. ஒருங்கிணைந்த கொள்கை முடிவுகளின் வலுவான அடித்தளத்தோடு, தமிழ்நாடு குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார வளர்ச்சியில் மீண்டெழுந்துள்ளது; 2021-22இலிருந்தே 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து எட்டிவருகிறது. 2024-25இலும் 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33%
தமிழ்நாட்டின் முற்போக்கான சமூகநலக் கொள்கைகளும், வலுவான உள்கட்டமைப்பு வசதிகளும், பெரும் எண்ணிக்கையிலான திறன்மிகு தொழிலாளர்களும் இம்மாநிலத்தை மேம்பட்ட பொருளாதார வளர்ச்சிப்பாதையில் இடம்பெறச் செய்துள்ளனர். இந்தியாவின் நிலப்பரப்பில் 4%, நாட்டின் மக்கள்தொகையில் 6% மட்டுமே கொண்டிருக்கும் தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24இல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது; பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71% ஆகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33% ஆகவும் உள்ளது.
உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வு
மோட்டார் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, தோல்பொருள்கள் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக விளங்குவதால், மாநிலப் பொருளாதாரமானது உலகளாவிய சந்தை நிலைகளையொட்டியே அமைந்துள்ளது; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளைக் காட்டிலும் உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையே பெரிதும் சார்ந்திருப்பதை அது எடுத்துக்காட்டுகிறது.
தனிநபர் வருமானம் தேசிய சராசரிக்கு மேல்
தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சியானது தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தேசிய சராசரியைவிடவும் அதிகமாகவே இருந்து வருகிறது. 2022-23இல் ரூ.278 லட்சமாக இருந்தது; இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தைக் காட்டிலும் 1.64 மடங்கு அதிகமானதாகும். இதன் காரணமாக, தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு நான்காம் இடம் வகிக்கிறது. மாநிலத்தின் தனி நபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் தேசிய சராசரியைவிட மேலே உள்ளது.
நகர்ப்புர-ஊரக இடைவெளி குறைப்பு
பெருநகரமொன்றை மட்டும் மையமாகக் கொண்டு இயங்கும் மகாராஷ்டிரம்,கர்நாடகம், மேற்குவங்காளம் போன்றமாநிலங்களைப் போலன்றி, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது மாநிலம் முழுவதுமுள்ள நகர்ப்புர மையங்களில் பரவலாக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற நகரங்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குவதோடு நகர்ப்புர-ஊரக இடைவெளிகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்
2023-24இல், சேவைத் துறை (மூன்றாம் நிலை) யானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக்கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63% பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37%), முதன்மைத் துறை (13%) பங்களித்துள்ளன. வளர்ந்த பொருளாதாரங்களைப் போலவே, மாநிலத்தின் இரண்டாம் நிலைத் துறையின் பங்கு 5% அளவில் அதிகரித்தால், வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.
1 டிரில்லியன் டாலர் இலக்கு
அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட நகரமயமாக்கப்பட்ட பொருளாதாரமான தமிழ்நாடு, 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போதைய ஆற்றலுடன், காலநிலை மாற்றம், மக்கள்தொகை மாற்றங்கள், தொழில்நுட்பச் சீர்குலைவு, மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழல்கள் போன்ற சவால்களை வியூகம் சார்ந்த திட்டமிடல் வாயிலாக வெற்றிகரமாக எதிர்கொண்டு தமிழ்நாடு இந்த இலக்கை எட்டும். மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியைப் பரவ்லாக்குவதற்குக் கிராமப்புறத் தொழில்முனைவோரை வளர்த்தெடுப்பதில் தமிழ்நாடு கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல், வேலையில் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவித்தல், வளர்ந்துவரும், தொழில்நுட்பங்கள் உள்பட உயர்மதிப்பு உற்பத்தி மற்றும் சேவைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றோடு தமிழ்நாடு அதன் மக்கள்தொகை சார்ந்த அனுகூலங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (ஐடிஇஎஸ்), தளவாடங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளை விரிவுபடுத்துவதற்கான வணிகச் சூழலை உருவாக்கி, குறைகடத்தி (செமிகண்டக்டர்) மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் துறைக்கான கொள்கைகளுடன் தமிழ்நாடு ஏற்கெனவே இந்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது.
சில்லறை பணவீக்கம் குறைவு
புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாகவும், காலநிலை மாற்றம் காரணமாகவும் உலகளாவிய பணவீக்கம் அதிகரித்து, 2022இல் 8.6% ஆகவும், 2023இல் 6.7% ஆகவும் இருந்தது. இந்தியாவின் சில்லறை வர்த்தகப் (சிபிஐ) பணவீக்கம் 2022-23இல் 6.7% ஆகவும், 2023-24இல் 5.4% ஆகவும் இருந்ததோடு 2024-25இல் (ஜனவரி 2025 வரை) 4.9% ஆக உள்ளது. தமிழ்நாட்டிலும் அதைப் போலவே 2022-23இல் 6% என்றிருந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கம், 2023-24இல் 5.4% ஆகவும், 2024-25இல் (ஜனவரி 2025இல்) 4.8% ஆகவும் குறைந்துள்ளது. 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பணவீக்கமான 4.85% ஐவிடத் தமிழ்நாட்டின் சராசரிப் பணவீக்கம் 5.7% என அதிகமாக இருந்தபோதும், 2021-22 முதல் மாநிலத்தின் சில்லறை வர்த்தகப் பணவீக்கம் கணிசமாகக் குறைந்துவருகிறது. குறிப்பாக, 2023-24இல் 20 முக்கிய இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 8ஆவது குறைந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கத்தைக் கொண்டிருந்தது.
நகர்புற பணவீக்கம் குறைவு
தமிழ்நாட்டில் 2019-20இல் 6% என்றிருந்த நகர்ப்புரப் பணவீக்கம் 2024-25இல் 4.5% ஆகக் குறைந்துள்ளது (ஜனவரி 2025 வரை); கிராமப்புறப் பணவீக்கம் 5.4% ஆக அப்படியே உள்ளது. இப்படியாக, கிராமப்புறப் பணவீக்கம் மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பணவீக்கத்தையும் இயக்குகிறது. உணவு மற்றும் பல்வகைப் பொருள்கள் கிராமப்புறப் பணவீக்கத்துக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குகின்றன.
வாங்கும் சக்தியை அதிகரிக்க நடவடிக்கை
பணவீக்கம் பெரும்பாலும் பணவியல் தொடர்பான நிகழ்வுதான் என்றாலும், மக்களின் வாங்கும் சக்தியைப் படிப்படியாக அது குறைத்துவிடுவதால் மக்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மின்சாரம் ஆகியவற்றை மானிய விலையில் வழங்குவதன் வாயிலாகவும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டங்கள் வாயிலாகப் பொருளாதார ஆதரவு வழங்குவதன் மூலமும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கிறது.
பருவமழையை நம்பியே விவசாயம்
தமிழ்நாட்டின் விவசாயம் பெரும்பாலும் பருவமழையை நம்பித்தான் நடைபெறுகிறது. விவசாயம் ரூ.1.5 லட்சம் கோடி (ஜிஎஸ்விஏவில் 6%) பங்களித்து, ஐந்தாவது பெரிய துறையாகத் திகழ்கிறது. மொத்தப் பயிரிடப்பட்ட பரப்பளவில், நெல், மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, தினைவகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் 62% ஆகவும், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி போன்ற உணவு தானியமல்லாத பயிர்கள் 38% 6 ஆகவும் உள்ளன. பயிர்ப் பரப்பில் நெல் தொடர்ந்து முதன்மை நிலை வகித்துவருகிறது. 2019-20இல் மொத்தப் பயிர்ப் பரப்பில் 32.1% ஆக இருந்த நெல்லின் பங்கு 2023-24இல் 34.4% ஆக அதிகரித்துள்ளது.
உரநுகர்வு அதிகரிப்பு
வேளாண் புள்ளிவிவரங்கள் ஒரு கண்ணோட்டம் (2024) அறிக்கையின்படி, தமிழ்நாடு எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித்திறனில் முதலிடத்திலும், மக்காச்சோள உற்பத்தித்திறனில் இரண்டாம் இடத்திலும், நெல் உற்பத்தித்திறனில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. வணிக விவசாய விரிவாக்கம், தமிழ்நாட்டின் முதன்மைப் பயிர்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஆகியவை ரசாயன உரங்களையும் நிலத்தடிநீரையும் அதிகமாகப் பயன்படுத்துவதன் வாயிலாக எட்டப்படுகின்றன. மாநிலத்தின் உர நுகர்வு 2019-20இல் 9.55 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 2023-24இல் 10.68 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. விவசாய மின் நுகர்வு 13,811 மில்லியன் யூனிட்டிலிருந்து 17,957 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது.
விவசாய கடனில் முன்னணி மாநிலம்
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தரும் முக்கியமான அமைப்பாக விவசாயக் கடன் திகழ்கிறது. பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் கடன் 2019-20இல் ரூ.1.83 லட்சம் கோடியிலிருந்து 2023-24இல் ரூ.3.58 லட்சம் கோடியாக அதிகரித்து, வணிக வங்கிகள் வழங்கும் விவசாயக் கடனில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. தற்போதைய சந்தை விலையுடன், நெல்லுக்கு ரூ.105 (ஒரு குவிண்டாலுக்கு), கரும்புக்கு ரூ.215 (ஒரு டன்னுக்கு) கூடுதல் ஊக்கத்தொகையாகத் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களால் பயிரிழப்பு ஏற்பட்டால், வேளாண் காப்பீட்டுத் திட்டமானது விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்துப் பாதுகாக்கிறது. வேளாண் வணிகத்தையும் உற்பத்திப் பொருள்களைப் பாதுகாப்பதையும் எளிதாக்கும் விதமாக, 284 ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள், 525 சேமிப்புக் கிட்டங்கிகள், 395 பரிவர்த்தனைக் கொட்டகைகள், 421 உலர்த்தும் இடங்கள், 863 வணிகக் கடைகள்,268 குளிர்பதனக் கிடங்குகள் என 19,856 மெட்ரிக் டன் அளவில் மொத்தக் கொள்ளளவைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.
