Modi Meditation: ’குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி தரக்கூடாது!’ காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ட்வீட்!
Modi's meditation: வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக திரு.மோடி அவர்கள் மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது என செல்வப்பெருந்தகை ட்வீட்

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடியை தியானம் செய்ய அனுமதிக்க கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
7ஆம் கட்ட தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடந்து உள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி அன்று கிழக்கு, மேற்கு, இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 30ஆம் தேதி மாலை உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில், மே 30ஆம் தேதி முதல் 24 மணி நேர தியானத்தில் ஈடுபட உள்ளார்.
இது அரசியல் நிகழ்வு அல்ல
தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்ட முடிவுக்கு பிறகு கன்னியாகுமரிக்கு அவர் செல்வது ஆன்மிக பயணமாக இருக்கும் என்பதால் அரசியல் நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது.
திருவள்ளுவர் சிலை அருகே அமைந்து உள்ள விவேகாந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில்தான் சுவாமி விவேகானதர் தியானம் செய்து உள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, உத்ராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் காவி உடை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொண்டார்.
பிரதமரின் திட்டம் என்ன?
தேர்தல் பரப்புரை நிறைவடையும் மே 30 ஆம் தேதி மாலையில் தியானத்தை தொடங்கும் மோடி ஜூன் 1 ஆம் தேதி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வரும் வரை தமிழ்நாட்டில் இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டுக்கு அரசு முறையாகவும், தேர்தல் பரப்புரைக்காகவும் பிரதமர் மோடி ஏழுக்கும் மேற்பட்ட முறை தமிழ்நாடு வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் தியானத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த நிலையில் பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். அதில் ”மே 30 முதல் ஜூன் 1 வரை திரு.நரேந்திர மோடி அவர்கள் கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.
வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக திரு.மோடி அவர்கள் மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் மாண்புமிகு நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தியானத்திற்கும் அனுமதி தர வேண்டும்
மேலும் இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேசிய அவர், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தொடர்பாக டிஜிபி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க உள்ளேன். தேர்தல் நடைமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், மே 31 மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் மறைமுக பிரச்சாரம் செய்ய மோடி திட்டமிட்டுள்ளார். 3 விமானங்களில் அவரை ஆதரிக்கும் ஊடகவியலாளர்களை கன்னியாகுமரிக்கு அழைத்து வருகின்றனர்.
தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் போது தேச நலனுக்காக தியானம் இருக்கிறேன் என்று மீடியாக்களை கூட்டி சென்று பிரச்சாரம் செய்வதை அனுமதிக்க முடியாது. தேர்தல் ஆணையம் மோடிக்கு ஆதரவாக இருந்தால், காங்கிரஸ் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய அனுமதி தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்போம் என செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
