Arittapatti : ‘சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தாருங்கள்’ அரிட்டாபட்டி மக்களிடம் முதல்வர் கோரிக்கை!
Arittapatti: ‘மீண்டும் ஒருமுறை உங்களையெல்லாம் சந்திக்க வருவோம். இன்னும் ஒன்றரை வருடத்தில் தேர்தல் வரயிருக்கிறது. அதுவும் உங்களுக்குத் தெரியும். அந்த தேர்தலில் நீங்கள் எல்லாம் என்ன முடிவோடு இருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். எது எப்படியிருந்தாலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’

சட்டமன்ற தேர்தலில் உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு ஆதரவு தாருங்கள். எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன் என அரிட்டாப்பட்டி மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
‘‘அரிட்டாப்பட்டி பகுதியை சுற்றியிருக்கக்கூடிய மக்கள், அந்தப் பகுதியில் உள்ள பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நேற்றைக்கு வந்து என்னை கோட்டையில் பார்த்தார்கள். டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் முழுமையாக இரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டதற்கு எப்படிப்பட்ட அழுத்தத்தை இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள் தந்தார்கள் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.
ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்
அதை உணர்ந்து உங்களால் உருவாக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சி, அதாவது உங்களுடைய நம்பிக்கை பெற்றிருக்கக்கூடிய உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சியில், நாடாளுமன்றத்தில் நம்முடைய கூட்டணியில் உள்ள எம்.பிக்கள் எல்லோரும் பேசி, அதற்குப் பிறகு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அது இன்றைக்கு நாம் நினைத்ததுபோல வெற்றியடைந்திருக்கிறது.
அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற நேரத்தில், அது அதிமுக கட்சியாக இருந்தாலும் சரி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய முஸ்லீம் லீக் போன்ற எல்லா கட்சிகளும் சட்டமன்றத்தில் ஒன்று சேர்ந்து அந்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றிக் கொடுத்தார்கள். அப்படி நிறைவேற்றிக் கொடுத்த நேரத்தில் நான் தெளிவாக சொன்னேன்.
என்றைக்கும் உறுதுணையாக நிற்பேன்
மக்களால் இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய நான் இந்த முதலமைச்சர் பொறுப்பில் இருக்கின்றவரைக்கும் நிச்சயமாக டங்ஸ்டன் திட்டம் வராது. அதைப்பற்றி மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக நான் எடுத்துச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அப்படி ஒருவேளை வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், நான் பதவியில் இருக்கமாட்டேன் என்று அதையும் சொன்னேன். ஆனால், அதற்காக நேற்றைக்கு என்னை சந்தித்த இந்தப் பகுதியில் உள்ள பெரியவர்கள் எல்லாம் பாராட்டு நிகழ்ச்சி நடத்தவேண்டும். உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று அழைத்தார்கள்.
உள்ளபடி எனக்கு பாராட்டு சொல்வதைவிட, நன்றி சொல்வதைவிட உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்; உங்களுக்குத்தான் பாராட்டு சொல்லவேண்டும். நான், உங்கள் என்று பிரித்து பேச விரும்பவில்லை. நாம், நமக்கு இதில் வெற்றி கிடைத்திருக்கிறது. அதுதான் உண்மை. ஆகவே, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கக்கூடிய நாங்கள் என்றைக்கும் உங்களுக்குத் துணை நிற்போம் என்பதை மீண்டும் ஒருமுறை இங்கே உறுதி சொல்கிறேன்.
என்றைக்கும் நீங்கள் ஆதரவு தாருங்கள்
மீண்டும் ஒருமுறை உங்களையெல்லாம் சந்திக்க வருவோம். இன்னும் ஒன்றரை வருடத்தில் தேர்தல் வரயிருக்கிறது. அதுவும் உங்களுக்குத் தெரியும். அந்த தேர்தலில் நீங்கள் எல்லாம் என்ன முடிவோடு இருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். எது எப்படியிருந்தாலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்.
இது கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. தந்தை பெரியார் அவர்கள் வழியோடு நடைபெறக்கூடிய ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி. உங்கள் வீட்டுப் பிள்ளை; உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி என்பதை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு, என்றைக்கும் நீங்கள் ஆதரவு தாருங்கள். உங்களுக்குப் பக்கபலமாக என்றைக்கும் நாங்கள் இருப்போம், இருப்போம்,’’
என்று அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசினார். அதைத் தொடர்ந்த வள்ளாலப்பட்டி கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள மக்கள் முன்னிலையிலும் பேசினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்