’உ.வே.சாவின் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்!’ பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி கோரிக்கை விடுத்து இருந்தார்.
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாளான பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் கூட்டத்தின் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கே.பி.முனுசாமி, ”தமிழ் மொழியில் அழிந்து வரும் நிலையில் இருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களை தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், 20ஆம் நூற்றாண்டில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் மற்றும் எழுத்துபிரதிகளை தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து கண்டுப்டித்து பதிப்பித்தார்கள். அந்த காலத்தில் ஒரு புத்தகத்தை பதிப்பு செய்வது என்பது பொருளாதார ரீதியாக இயலாத காரியம். கல்விமான்கள், செல்வந்தர்களிடம் சென்று ஒப்பந்தம் போட்டார். 90க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்து தமிழ்த்தாத்தா உவேசா அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். அவருடைய பிறந்தநாளான பிப்ரவரி திங்கள் 19ஆம் நாளில் இலக்கியத்தின் மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தேன். அமைச்சர் அவர்கள் அதை பரிசீலிப்பார்களா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்ன கருத்துகளில் உவேச அவர்களின் தமிழ் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்து சொல்லி உள்ளார்கள். அதை ஏற்றுக் கொள்கிறோம். இருந்தாலும், இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிக்கப்படுவது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி பரிசீலிப்போம் என்றார்.
தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, உவேச அவர்கள் திருவாவடுறை ஆதீனத்தில் கல்வி கற்க செல்லும் போது, அவர்களின் பெற்றோர்கள் வைத்த பெயர் வெங்கட்ராமன். திருவாவடுறை ஆதீனம் சைவம். தான் வைணவன் என்ற காரணத்தால் தனது பெயரை சாமிநாதன் என்று பெயர் மாற்றி மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் பயின்றவர். சீவகசிந்தாமணி இலக்கியத்தை பதிப்பிக்க சமணர்களின் ஆலோசனையை பெற்றார். இதற்காக சைவர்கள் அவரை எதிர்த்தனர். இருந்தாலும் எனது வேலை தமிழுக்கு பணி செய்வதுதான் என்று சொன்னவர். தமிழுக்காக இருக்கும் இயக்கம் திராவிட இயக்கம் ஆகும். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அவரது பெயரில் விருதை அறிவித்து உள்ளார்கள். இந்த இயக்கம் இதை அறிவிக்குமா என்பதை கேட்க விரும்புகிறேன் என குறிப்பிட்டார்.
அதனை அடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு உறுப்பினர் கே.பி.முனுசாமி அவர்கள் கோரிக்கை வைத்து துறை அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார். உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார். அவருடைய கோரிக்கையை ஏற்று வரக்கூடிய காலகட்டத்தில் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.