தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: யார் வெளியே? யார் உள்ளே?’ ஏப்.30க்குள் ஸ்கெட்ச்! உடைத்து பேசும் குபேந்திரன்!
“அமலாக்கத்துறை புலனாய்வு அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் துறையை எந்த அமைச்சரும் விரும்பவில்லை”

ஏப்ரல் 30-க்குள் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்து உள்ளார்.
வெளியேறும் 2 அமைச்சர்கள்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் உறுதியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பின்னர், வரும் ஏப்ரல் 30-க்குள் அமைச்சரவையை மாற்றத் திட்டமிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி சட்ட சிக்கல்களால் ஆட்டம் காண்கிறது, மேலும் பொன்முடியும் பதவியிலிருந்து வெளியேற்றப்படலாம் என தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் தெரிவித்தார்.
“செந்தில் பாலாஜி ஜாமீனா, பதவியா என முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளார்,” என குபேந்திரன் கூறினார். உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அமைச்சராக இருப்பது வழக்கின் நியாயத்தை பாதிக்கும் என வலியுறுத்துகின்றன.
பொன்முடியின் பேச்சால் பதவி பறிபோகுமா? லட்சுமணனுக்கு வாய்ப்பு
பொன்முடியின் பேச்சு அவரது பதவிக்கு ஆப்பு வைத்துள்ளதாக குபேந்திரன் குறிப்பிட்டார். “முதலமைச்சர் பொன்முடியை வெளியேற்றுவதில் உறுதியாக உள்ளார்,” என்றார். இருவர் வெளியேறினால், விழுப்புரம் திமுக எம்எல்ஏ லட்சுமணனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், “லட்சுமணனின் உயர்வு பொன்முடிக்கு போட்டியாக அமையும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன,” என அவர் சுட்டிக்காட்டினார்.
செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் துறை யாருக்கு?
செந்தில் பாலாஜியின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள், குறிப்பாக டாஸ்மாக், மற்றொரு அமைச்சருக்கு மாற்றப்படலாம். “அமலாக்கத்துறை புலனாய்வு அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் துறையை எந்த அமைச்சரும் விரும்பவில்லை,” என குபேந்திரன் கூறினார். துரைமுருகனின் கனிமவள துறையில் மாற்றம், சக்கரபாணிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.
“திமுகவின் சட்டப்பிரிவு பெரும் அழுத்தத்தில் உள்ளது. சொத்து குவிப்பு வழக்குகளில் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் சிக்கியுள்ளனர்,” என எச்சரித்த குபேந்திரன், முதலமைச்சர் சட்ட விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் அரசுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படலாம் என கூறினார்.
