தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’ஒன்றிய அரசு தராமல் வஞ்சிக்கும் 2152 கோடி நிதியை தமிழ்நாடு அரசே ஏற்கும்!’ தங்கம் தென்னரசு
”எனினும் இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாததால் ஏற்கெனவே ஒப்புதல் அளித்த நிலையிலும், 2152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு விடுவிக்காமல் வஞ்சித்து உள்ளது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்”

சம்க்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்காக 2152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு விடுவிக்காமல் வஞ்சித்து வரும் நிலையில், அத்தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டம்
நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்விதுறை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டமான சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் பல்வேறு மாணவர் நலத்திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி, தொலைதூர குடியிருப்புகளில் இருந்து மாணவர்கள் வந்து செல்ல போக்குவரத்து படி, ஆசிரியர்களுக்கான ஊதியம், உயர்கல்வி வழிகாட்டி, கலைத்திருவிழா, கல்வி சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட்: ’ஈட்டிய விடுப்பு முதல் பத்திரப்பதிவு தள்ளுபடி வரை’ கடைசி நேரத்தில் தங்கம் தென்னரசு சொன்ன 4 அறிவிப்பு
ஒன்றிய அரசு வஞ்சித்துவிட்டது
எனினும் இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாததால் ஏற்கெனவே ஒப்புதல் அளித்த நிலையிலும், 2152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு விடுவிக்காமல் வஞ்சித்து உள்ளது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’உரிமை தொகை கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்!’ தங்கம் தென்னரசு வெளியிட்ட ’நச்’ அறிவிப்பு!
மாநில அரசே சொந்த நிதியை தரும்
ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி, அரசு பள்ளி மாணவர்கள் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்கு உரிய நிதியை மாநில அரசே அதன் சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்து உள்ளது.
பாவேந்தரின் வரிகளை சுட்டிக்காட்டிய தங்கம் தென்னரசு
நெருக்கடியான இந்த சூழலிலும் 2 ஆயிரம் கோடி நிதியை இழந்தாலும், இருமொழிக் கொள்கையை விடுத்தர மாட்டோம் என கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று தமிழ்நாட்டின் தன்மானம் காத்த மாண்புமிகு முதலமைச்சரின் பின்னால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அணி வகுத்து உள்ளனர். எத்தனை தடைகள் எதிர்வரினும் மன உறுதி உடன் நம்மை வழிநடத்தும் முதலமைச்சருக்கு ஆதரவாய் திரண்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு பாவேந்தர் பாரதிதாசனின் வைர வரிகளை நினைகூற விழைகிறேன். ”தமிழருக்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடை செய்யும் நெடுங்குன்றும் தூளாய் போகும்” என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

டாபிக்ஸ்