“பிரதமர் வரக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்” நயினார் நாகேந்திரன்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  “பிரதமர் வரக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்” நயினார் நாகேந்திரன்

“பிரதமர் வரக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்” நயினார் நாகேந்திரன்

Kathiravan V HT Tamil
Published Jun 21, 2025 01:40 PM IST

”ஆயுஷ்மான் பாரத் திட்டமாக இருந்தாலும், வீடு கட்டுவதற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை மாநில அரசு வெறும் ஸ்டிக்கர் ஒட்டி தனது சாதனையாகக் காட்டுகிறது”

“பிரதமர் வரக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்” நயினார் நாகேந்திரன்
“பிரதமர் வரக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்” நயினார் நாகேந்திரன்

சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லையில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி வலிமை உடன் உள்ளதாகவும், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்த கேள்விக்கு, “பிரதமருக்கு நிறைய வேலை இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்,” என்று கிண்டலாக பதிலளித்தார்.

மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு “ஸ்டிக்கர்” ஒட்டுகிறது

நயினார் நாகேந்திரன், மத்திய அரசு வழங்கும் திட்டங்களை தமிழக அரசு தனது பெயரில் செயல்படுத்துவதாக விமர்சித்தார். “ஆயுஷ்மான் பாரத் திட்டமாக இருந்தாலும், வீடு கட்டுவதற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை மாநில அரசு வெறும் ஸ்டிக்கர் ஒட்டி தனது சாதனையாகக் காட்டுகிறது. தமிழை வைத்து அரசியல் செய்வதைத் தவிர திமுகவுக்கு வேறு வேலை தெரியாது,” என்று குற்றம்சாட்டினார்.

தமிழ் மொழியை மோடி உயர்த்துகிறார்

பிரதமர் மோடி தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை உலக அளவில் பரப்புவதாக நயினார் புகழ்ந்தார். “தமிழ் உலகின் பழமையான, சிறந்த மொழி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், மோடி ஐநா சபையிலும், அயோத்தியிலும், அண்டை மாநிலங்களிலும் தமிழைப் பற்றி பேசுகிறார். தமிழுக்கு உண்மையாக வாழும் ஒரே தலைவர் மோடி,” என்று கூறினார்.

திமுக கூட்டணியில் புகைச்சல்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக-அதிமுக கூட்டணி குறித்து பேசியது குறித்து, நயினார், “திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும்? திருமாவளவன் கூட்டணியில் தொடர்வோம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், 5 சீட் வாங்கியவர்கள், 2 சீட் கிடைத்தாலும் தொடர்வார்களா? இதை அவர்களிடமே கேளுங்கள்,” என்று கிண்டலாக பதிலளித்தார்.

அமித்ஷாவின் தமிழக வருகை

பிரதமர் மோடி தமிழகம் வருவாரா என்ற கேள்விக்கு,“பிரதமருக்கு நிறைய வேலை இருக்கிறது. தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்,” என்று பதிலளித்தார். 

பாஜக-அதிமுக கூட்டணியின் வலிமை

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், திமுகவுக்கு இந்த கூட்டணி பயத்தை ஏற்படுத்துவதாகவும் நயினார் கூறினார். “நீங்கள் திரும்பத் திரும்ப எங்கள் கூட்டணியைப் பற்றி கேட்பது, எங்கள் கூட்டணி வலுவாக இருப்பதையே காட்டுகிறது. வலுவில்லாத கூட்டணியைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் தோல்விகள்

திமுக ஆட்சியை “மக்கள் விரோத ஆட்சி” என்று விமர்சித்த நயினார், “கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு நிதி கொடுத்தாலும், மாநில அரசு அதை தனது சாதனையாகக் காட்டுகிறது. திருநெல்வேலி மாநகராட்சிக்கு 100 கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்தும், பூங்காக்கள் பராமரிக்கப்படவில்லை,” என்று குற்றம்சாட்டினார். மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு நிதியை வைத்தே செயல்படுத்துவதாகவும் கூறினார்.