Annamalai : பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா? எத்தனை ஆண்டுகள் தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்? - அண்ணாமலை!
Annamalai : உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, இன்னும் எத்தனை ஆண்டுகள் மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Annamalai : பள்ளி மாணவர்களின் கல்வியில் எதற்கு இந்த நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்றால், விவரம் அறிந்தவர்களிடம் கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கல்வித் துறையை, ரசிகர் மன்றம் போல நடத்திக் கொண்டிருக்கும் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களுக்கு கல்வித் துறை சம்பந்தமான பணிகள் குறித்துத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
PMSHRI திட்டத்தில் இணைவோம் என்று உறுதியளித்து விட்டு, அதில் இணையாமல், அந்தத் திட்டத்துக்கான நிதியை வழங்கவில்லை என்று கூறுவதில் வெறும் அரசியலைத் தவிர வேறொன்றுமில்லை. பள்ளி மாணவர்களின் கல்வியில் எதற்கு இந்த நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா?
உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்றால், விவரம் அறிந்தவர்களிடம் கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டும். பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும், வழங்கப்பட்ட நிதியும், அமைச்சர் பகிர்ந்துள்ள அறிக்கையிலேயே இருக்கிறது.
எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா?
உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, இன்னும் எத்தனை ஆண்டுகள் மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்? “ என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி
இதே போல இரு தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை விமர்சித்து ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், “பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், சுவர் இல்லை, கூரை இல்லை, போதிய ஆசிரியர்களும் இல்லை, வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி. இது தான் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் லட்சணம்.
திருச்சி மாவட்டம், பச்சை மலையில் உள்ள ராமநாதபுரம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த பள்ளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, பழைய கட்டிடத்தை இடித்துள்ளனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
எங்கே செல்கிறது இந்த நிதி?
மகனின் ரசிகர்மன்ற தலைவருக்கு பதவி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்திருந்தால், சினிமாத் துறை என்ற புதிய துறையை உருவாக்கி, திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அமைச்சர் ஆக்கியிருக்க வேண்டியது தானே முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களே. என் ஏரியா, உன் ஏரியா என்று திரைப்பட பாணியில் வசனங்கள் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி என்று நினைத்துக் கொண்டிருப்பவருக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.
பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 44,042 கோடி ரூபாய். எங்கே செல்கிறது இந்த நிதி? அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தல் உட்பட பல்வேறு பணிகளுக்காக 2021 தொடங்கி 2024 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.5,583 கோடி எங்கே போனது? வாங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று பொய் கூறக் கூச்சமாக இல்லையா?” என பதிவிட்டிடுந்தார்.

தொடர்புடையை செய்திகள்