Annamalai: ’தமிழ்நாடு பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்’ ம.பி செல்லும் அண்ணாமலை! போட்டு உடைத்த எஸ்.வி.சேகர்
”இந்த கூட்டணி அண்ணாமலையால்தான் முறிந்தது. கட்சித் தலைமை கூப்பிட்டு அண்ணாமலையை திட்டி இருக்கும்.ஆனால் இவர் கமலஹாசனுக்கு அறிவுரை சொல்லி வருகிறார்”

சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு பாஜக உறுப்பினரும் நடிகருமான எஸ்.வி.சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ளது குறித்த கேள்விக்கு, இதனால் மத்தியில் உள்ள மோடி அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி அவர்கள் ஹார்டிக் பிரதமராக வருவது உறுதி. இந்த கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாடு பெரிய அளவில் உதவி செய்யப்போவது இல்லை.
இந்த கூட்டணி பிளவுக்கு அண்ணாமலைதான் காரணம் என அதிமுக தரப்பில் இருந்து பாஜக தலைமைக்கு சொல்லி உள்ளனர். அண்ணாமலை கூட்டணி தலைவர்களை தவறாக விமர்சிக்கிறார் என்று கூறி உள்ளனர். அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லாததால் அவ்வாறு பேசி உள்ளார். அப்படிப்பட்டி ஒருவரை தமிழ்நாடு தலைவராக அமர்த்தியதுதான் தவறு.
அதை கட்சி மேலிடம் உணரும். மத்திய பிரதேச தேர்தல் வரும் போது அம்மாநில பார்வையாளராக அண்ணாமலை செல்வார். விரைவில் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார்.
தமிழ்நாட்டில் பிராமணர்கள் தங்களின் எண்ணிக்கையை காட்டுவதற்காக அறவோர் முன்னேற்றக் கழகம் என்று கட்சி தொடங்கி உள்ளனர். அதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த கூட்டணி அண்ணாமலையால்தான் முறிந்தது. கட்சித் தலைமை கூப்பிட்டு அண்ணாமலையை திட்டி இருக்கும்.ஆனால் இவர் கமலஹாசனுக்கு அறிவுரை சொல்லி வருகிறார். அண்ணாமலை தமிழ்நாட்டில் தலைவராக இருக்கும் வரை பாஜக பூஜ்ஜியம்தான் என கூறினார்.
