Ponmudi Case: ’பொன்முடி வழக்கில் திருப்பம்!’ தண்டனை நிறுத்தி வைப்பு! திருக்கோவிலூர் எம்.எல்.ஏவாக தொடர வாய்ப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ponmudi Case: ’பொன்முடி வழக்கில் திருப்பம்!’ தண்டனை நிறுத்தி வைப்பு! திருக்கோவிலூர் எம்.எல்.ஏவாக தொடர வாய்ப்பு!

Ponmudi Case: ’பொன்முடி வழக்கில் திருப்பம்!’ தண்டனை நிறுத்தி வைப்பு! திருக்கோவிலூர் எம்.எல்.ஏவாக தொடர வாய்ப்பு!

Kathiravan V HT Tamil
Updated Mar 11, 2024 03:08 PM IST

”Ponmudi Case: உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக அரசியல் களத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. திருக்கோயிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் அவர் தொடர்ந்து எம்.எல்.ஏவாக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது”

முன்னாள் அமைச்சர் க.பொன்முடி
முன்னாள் அமைச்சர் க.பொன்முடி (HT_PRINT)

3 ஆண்டு சிறை தண்டனை 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

அமைச்சர் பதவியை இழந்தார்

இந்த தீர்ப்புக்கு ஏதுவாக ஒரு மாத காலம் நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்திருந்தார். 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். இதனை தொடர்ந்து புதிய உயர்க்கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கின் பின்னணி

கடந்த 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ஆம் ஆண்டில் செப்டம்பரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2006 ஏப்ரல் 13 முதல் 2010 மே 13 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக கூறப்பட்டது. இது வருமானத்தை விட 65.99 சதவிகிதம் அதிகம் ஆகும்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் 2006 ஆண்டு ஏப்ரல் 13 முதல் 2011 மே 14 வரையிலான காலமாக மாற்றப்பட்டது.

நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016 ஏப்ரலில் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2017ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். 

தண்டனை நிறுத்தி வைப்பு

இந்த வழக்கின் தீர்ப்ப்பு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் பொன்முடி உள்ளிட்டோர் மீதான சிறை தண்டனை நிறுத்தி வைத்துள்ளதுடன், ஜாமீனும் வழங்கி உள்ளது. மேலும் பொன்முடி உள்ளிட்டோர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது. 

திருக்கோவிலூரில் இடைத்தேர்தல் நடக்குமா?

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக அரசியல் களத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.  திருக்கோயிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் அவர் தொடர்ந்து எம்.எல்.ஏவாக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.