Anna University Student Case: அண்ணா பல்கலைக்கழக சர்ச்சை! சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை!
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமாக இருந்த அதிகாரிகளிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை வசூலித்து மாணவிக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை முதல் தகவல் அறிக்கையை குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவின் கண்ணியம் காக்கப்படவில்லை. சென்னை காவல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கவும், கல்வி கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும், தொடர்ந்து படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை
இந்த வழக்கில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட FIR வெளியான விவகாரத்தில் காவல்துறை மீது தவறு இல்லை என்பதால் உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது. சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உள்ளது.
மாணவிக்கு 25 லட்சம் தர உத்தரவு
மேலும், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமாக இருந்த அதிகாரிகளிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை வசூலித்து மாணவிக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் மாணவியின் செயல்தான் குற்றம் நடக்க காரணம் என்பதுபோல் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. எஃப்.ஐ.ஆர் லீக் ஆனதால் மாணவி மீது குற்றம் சொல்லக் கூடிய கொடுமை நிகழ்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
