’செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?’ லிஸ்டு கேட்ட உச்சநீதிமன்றம்! அரசுக்கு அதிரடி நோட்டீஸ்!
வாதங்களை கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள், போக்குவரத்து துறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் உள்ள சாட்சியங்கள் குறித்த விவரங்களை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தர உத்தரவிட்டு உள்ளனர்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு எதிராக வழக்கு:-
அமைச்சராக பொறுப்பேற்று உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரை பதில் மனுதாரராக அளித்து பதில் தர உத்தரவிட்டு உள்ளது.
அமலாக்கத்துறை வழக்கறிஞர் சொலுசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன் வைத்த வாதத்தில், ”செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது சக்திவாய்ந்த நபராக இருந்தார். தற்போது அவர் அமைச்சராகி உள்ளதால் வழக்கில் தாக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள், போக்குவரத்து துறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் உள்ள சாட்சியங்கள் குறித்த விவரங்களை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தர உத்தரவிட்டு உள்ளனர்.
செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் அதில் இடம் பெறவில்லை. 2016 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மோசடி வழக்குப்பதிவு
தொடர்ந்து முறைகேட்டு புகாரின்படி, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சம்மனும் அனுப்பியது. ஆனால், உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்ந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் செந்தில்பாலாஜி. அதே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை எனக் கோரிக்கை வைத்தது.
2022 ஆம் ஆண்டு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜியும் உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். இந்த வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
மீண்டும் அமைச்சர் ஆன செந்தில் பாலாஜி
ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழக்கியது. செப்டம்பர் 29ஆம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறையின் அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார்.