Sanatana Dharma: சனாதன சர்ச்சை! உதயநிதிக்கு எதிரான வழக்குகள் புஸ்….! உச்சநீதிமன்றம் தந்த திடீர் ட்விஸ்ட்!
சனாதன பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்ததை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சனாதன தர்மம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்களுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
உதயநிதி பேச்சால் வெடித்த சர்ச்சை
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டிருந்தார். மேலும் திமுக எம்.பியான ஆ.ராசாவும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார்.
பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பல்வேறு வழக்குகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டது. இந்த நிலையில் சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துக்காக பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பல எஃப்.ஐ.ஆர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உதயநிதி ஸ்டாலின் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு அமைச்சர் என்றும், அவரது கருத்துக்களின் விளைவுகளை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தனர்.
மனுக்கள் தள்ளுபடி
சனாதன பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்ததை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை திரும்ப பெற அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேறு இடத்தில் நிவாரணம் பெறும் வகையில் மனுத்தாக்கல் செய்ய அனுமதி வழங்கி உள்ளனர்.
