தயாநிதி Vs கலாநிதி: ‘குடும்ப பிரச்னைதானே தவிர; வர்த்தக பிரச்னை இல்லை!’ சன் குழுமம் விளக்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தயாநிதி Vs கலாநிதி: ‘குடும்ப பிரச்னைதானே தவிர; வர்த்தக பிரச்னை இல்லை!’ சன் குழுமம் விளக்கம்

தயாநிதி Vs கலாநிதி: ‘குடும்ப பிரச்னைதானே தவிர; வர்த்தக பிரச்னை இல்லை!’ சன் குழுமம் விளக்கம்

Kathiravan V HT Tamil
Published Jun 20, 2025 01:44 PM IST

“ஊடக செய்திகளில் கூறப்படும் அறிக்கைகள் "தவறானவை, தவறாக வழிநடத்துபவை, ஊகமானவை, அவதூறானவை மற்றும் உண்மைகளால் ஆதரிக்கப்படாதவை" என்று சன் டிவி நெட்வொர்க் தெரிவித்து உள்ளது”

தயாநிதி Vs கலாநிதி: ‘குடும்ப பிரச்னைதானே தவிர; வர்த்தக பிரச்னை இல்லை!’ சன் குழுமம் விளக்கம்
தயாநிதி Vs கலாநிதி: ‘குடும்ப பிரச்னைதானே தவிர; வர்த்தக பிரச்னை இல்லை!’ சன் குழுமம் விளக்கம்

மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டு உள்ள சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனுக்கு, அவரது சகோதரரும், திமுக எம்பியுமான தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில், கலாநிதி மாறன், சன் குழும நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலைக்கு தனக்குத்தானே ஒதுக்கீடு செய்து கொண்டதாகவும், இதன் மூலம் சன் குழுமத்தில் 60% உரிமையை மற்ற பங்குதாரர்களிடம் கேட்காமலேயே எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் பங்குச்சந்தையில் இன்று காலை சன் குழும பங்குகள் 4 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. இந்த நிலையில், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம், அதன் புரமோட்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த ஊடக செய்திகளுக்கு விளக்கமளித்து, இந்த விஷயங்கள் நிறுவனத்தின் வணிகத்துடன் தொடர்பில்லாதவை என்று விளக்கம் அளித்து உள்ளது.

மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு (NSE) சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்டு உள்ள விளக்க கடிதத்தில், "ஊடகங்க்ளில் கூறப்படும் விஷயம் 22 ஆண்டுகளுக்கு முந்தையது, அப்போது நிறுவனம் ஒரு பிரைவேட் லிமிடெட் ஆக இருந்தது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊடக செய்திகளில் கூறப்படும் அறிக்கைகள் "தவறானவை, தவறாக வழிநடத்துபவை, ஊகமானவை, அவதூறானவை மற்றும் உண்மைகளால் ஆதரிக்கப்படாதவை" என்று சன் டிவி நெட்வொர்க் தெரிவித்து உள்ளது.

மேலும், நிறுவனம், "அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் பொது வெளியீட்டிற்கு முன் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்களால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளன" என்றும் தெரிவித்துள்ளது.

"ஊடக செய்திகளில் கூறப்படும் விஷயங்கள் நிறுவனத்தின் வணிகத்திற்கும் அதன் அன்றாட செயல்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை, மேலும் புரமோட்டரின் குடும்பம் தொடர்பானவை முற்றிலும் தனிப்பட்டவை" என்றும் சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் தெளிவுபடுத்தியுள்ளது.