"பாவம் பால்வளத்துறையை கொல்லாதீங்க, விட்டுடுங்க..!" தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வேதனை!
11லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்திருந்தால் தினசரி பால் கொள்முதல் தற்போது சுமார் 48லட்சம் லிட்டராக உயர்ந்திருக்க வேண்டும். அப்படியானால் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் பால் எங்கே போகிறது..?

"பாவம் பால்வளத்துறையை கொல்லாதீங்க, விட்டுடுங்க..!" என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ பொன்னுசாமி வேதனை தெரிவித்து உள்ளார்.
அழுவதா? சிரிப்பதா?
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தமிழ்நாட்டில் பால் விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆட்சியை விட தற்போது 11 லட்சம் லிட்டர் கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் பதில் அளித்த செய்தியை படித்த போது அழுவதா..? இல்லை சிரிப்பதா..? என தெரியவில்லை.
மேலும் படிக்க:- ’தேன்மொழிக்கு தேனான செய்தி’ சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏவை கலாய்த்த துரைமுருகன்! பேரவையில் சிரிப்பலை!
ஏனெனில் தமிழ்நாட்டில் பால் விற்பனை நேரம் என்பது கனமழை பெய்து, பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் மட்டுமல்ல கொரோனா போன்ற நோய் பெருந்தொற்று காலங்களிலும் ஒரே நிலைப்பாட்டில் (அதாவது அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை) தொடர்ந்து கொண்டிருக்கும் போது இதில் பால் விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதே நகைப்பிற்குரிய விசயமாகும். (இது போன்ற தகவல்களை எழுதித் தரும் அதிகாரிகளுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கெளரவிக்கலாம்.)
வாய் புளித்ததோ., இல்லை மாங்காய் புளித்ததோ..!!
மேலும் கடந்த 2021ல் அதிமுக ஆட்சியை விட்டுச் சென்ற போது அப்போதைய காலகட்டத்தில் ஆவினுக்கான தினசரி பால் கொள்முதல் என்பது சுமார் 38.26லட்சம் லிட்டராக இருந்ததும், அதுவே கொரோனா காலத்தில் சுமார் 43லட்சம் லிட்டராக இருந்ததும் அப்போதைய பால்வள மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஆவணமாக உள்ள நிலையில் அதனை ஒப்பிட்டு தகுந்த ஆதாரங்களோடு கூறாமல் வாய் புளித்ததோ., இல்லை மாங்காய் புளித்ததோ..!! என்பதை போல துறை சார்ந்த அமைச்சர் பேசுவது ஏற்புடையதல்ல. (உண்மை தகவல்களை மறைத்து பொய்யான தகவல்களை அமைச்சருக்கு வழங்கும் அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் உதவியாளர்களுக்கு பாரத ரத்னா விருதே கொடுக்கலாம்.)
மேலும் படிக்க:- ’உட்கார்ந்து கொண்டு மிரட்டக் கூடாது’ அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை! நடந்தது என்ன?
கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் பால் எங்கே?
அதுமட்டுமின்றி 2021ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது ஆவடி சா.மு.நாசர் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சமயம் ஆவினுக்கான பால் கொள்முதல் திட்டமிட்டு குறைக்கப்பட்டு தினசரி 25லட்சம் லிட்டர் என்கிற நிலைக்கு கடும் சரிவை சந்தித்ததும், அதன் பிறகு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ஆவினுக்கான பால் கொள்முதல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கி தினசரி பால் கொள்முதல் சுமார் 37லட்சம் லிட்டர் என்கிற நிலைக்கு மீண்டு(ம்) வந்ததும், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பாலுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாலும், பால் கொள்முதல் விலை உயர்வு கேட்டு பால் உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் போராடி வருவதாலும், பால் கொள்முதல் தனியாருக்கு மடைமாற்றம் செய்யப்படுவதாலும் ஆவினுக்கான பால் கொள்முதல் மீண்டும் சரிவடையத் தொடங்கி தற்போது சுமார் 34லட்சம் லிட்டருக்கு கீழ் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது எனும் போது 11லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்திருந்தால் தினசரி பால் கொள்முதல் தற்போது சுமார் 48லட்சம் லிட்டராக உயர்ந்திருக்க வேண்டும். அப்படியானால் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் பால் எங்கே போகிறது..?
பால்வளத்துறையை கொல்லாதீங்க
நிலைமை இவ்வாறிருக்க அதிகாரிகளும், உதவியாளர்களும் எழுதித் தருவதை கண்ணை மூடிக் கொண்டு படிப்பதால் தான் கூகுள் நிறுவனத்தின் CEO திரு. சுந்தர் பிச்சை அவர்கள் ஒரு தொழிலதிபர் என்றும், CEO என்பவர் "Chief Educational Officer" என்றும் பொது மேடையில் பேசியதைப் போல பால் விற்பனை துறையிலும், ஆவினுக்கான பால் கொள்முதலிலும் என்ன நடக்கிறது..? என்பதே தெரியாமல் பேசியிருப்பதை உணர முடிகிறது. இது பால்வளத்துறை அமைச்சராக உள்ள மூத்த அரசியல்வாதியான திரு. ராஜகண்ணப்பன் அவர்கள் அதிகாரிகள், உதவியாளர்கள் எழுதித் தருவதை அலசி ஆராயாமல் அப்படியே பேசுவது வியப்பாகவும், விசித்திரமாகவும் உள்ளது. ஒருவேளை கடந்த அதிமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி, தற்போதைய திமுக ஆட்சியில் நாசர், மனோ தங்கராஜ் வரிசையில் ராஜகண்ணப்பன் அவர்களும் இணைந்திருப்பதை காணும் போது பாவம் பால்வளத்துறையை கொல்லாதீங்க, விட்டுடுங்க என்றே சொல்லத் தோன்றுகிறது.
