Salim Ali: யானை தாக்கி மாணவர் பலி -கருப்பு பேட்ச் அணிந்து சலீம் அலி சிலை முன் மாணவர்கள் போராட்டம்
Coimbatore: கேன்டீனுக்கு தண்ணீர் எடுப்பதற்காக செல்லும்பொழுது விஷாலை யானை தாக்கியதாகவும், மையத்தில் போதுமான விளக்கு வசதிகளோ, டார்ச் லைட் போன்றவையோ இல்லாமல் இருப்பதாகவும், உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவையில் மத்திய அரசின் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து சலீம் அலி சிலை முன்பாக அமைதியான வழியில் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம், செயல்பட்டு வருகிறது.மேலும் இங்கு ஆராய்ச்சி படிப்புகளும் பயிற்று விக்கப்படுகிறது.
இம்மையத்தில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பறவை ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது இங்கு யானைகள் ,காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகும்.
இந்த பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் என்பவர் கடந்த வாரம் ஆராய்ச்சி படிப்பிற்காக வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல் என்பவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். இந்நிலையில் விஷால் மரணத்திற்கு சலீம் அலி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டி சக ஆராய்ச்சி மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டிக்கும் வகையில் இன்று ஆராய்ச்சி மைய வளாகத்தில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருப்பு பேட்ச் அணிந்தபடி அமைதியான முறையில் சலீம் அலி சிலை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஷால் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி விஷால் புகைப்படம் மற்றும் வாட்டர் கேனிற்கு ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரத்தில் மையத்தில் தண்ணீர் இல்லாததால் கேன்டீனுக்கு தண்ணீர் எடுப்பதற்காக செல்லும்பொழுது விஷாலை யானை தாக்கியதாகவும், மையத்தில் போதுமான விளக்கு வசதிகளோ, டார்ச் லைட் போன்றவையோ இல்லாமல் இருப்பதாகவும், உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டாபிக்ஸ்