கண்களை கட்டிக் கொண்டு செஸ் விளையாடி அசத்திய மாணவன்!
கண்களை கட்டிக் கொண்டு செஸ் விளையாடி அசத்திய 5ஆம் வகுப்பு மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குவைத் நாட்டில் பயிலும் மாணவர் கண்ணை கட்டி கொண்டு செஸ் விளையாடி மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
குவைத் நாட்டில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் மித்திலேஷ் ரஞ்சித்குமார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளிக்கு இன்று வருகை தந்திருந்தார். அப்போது செஸ் விளையாட்டில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் விதமாக கண்களைக் கட்டி கொண்டு பிற மாணவர்களுடன் செஸ் விளையாண்டு அசத்தினார்.
குவைத் நாட்டில் ஆசிரியையாக பணிபுரியும் சாந்தி காய்களை நகர்த்துவது குறித்து தெரிவிக்க, கண்களை கட்டிக்கொண்டு செஸ் போர்டுக்கு பின்புறமாக உட்கார்ந்திருந்த ரஞ்சித் தனது காய்களை எப்படி நகர்த்த வேண்டும் என்று மனதிற்குள் கணக்கு போட்டு சொல்கிறார். அதன்படி ஆசிரியை காய்களை நகர்துகிறார். இதை பார்த்த மாணவர்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். அதோடு மட்டுமல்லாமல் செஸ் விளையாட்டு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற்றனர்.
விளையாண்டு முடிந்த பிறகு மித்திலேஷ் மீண்டும் தான் நகர்த்திய காய்களையும், தன்னுடன் விளையாண்டவர் நகர்த்திய காய்களையும் மிக அழகாக நினைவில் வைத்து முழு விளையாட்டையும் நகர்த்தி காண்பித்தார். கண்ணை கட்டி கொண்டு விளையாடுவதற்கு தொடர் பயிற்சியே காரணம் என்றும் இளம் வயதில் சதுரங்கம் விளையாடினால் பல வெற்றிகளை எளிதில் பெறலாம் என்றும் மாணவர் மித்திலேஷ் ரஞ்சித்குமார் தெரிவித்தார்.
முன்னதாக, ஆசிரியை முத்துலெட்சுமி மாணவரை வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். குவைத் நாட்டில் ஆசிரியையாக பணிபுரியும் சாந்தி முன்னிலை வகித்தார். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
டாபிக்ஸ்