Speaker Appavu: ’என் தம்பி ஞானசேகரன்!’ சபாநாயகர் அப்பாவு பேச்சால் வெடித்தது சர்ச்சை! விளாசும் அண்ணாமலை!
திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத் தானே செய்யும். தன்னை அறியாமல் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் திரு. அப்பாவு. பாலியல் குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரனுக்குப் பக்கபலமாக இருந்த அந்த “சார்” யாரென்று, இன்று வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை என அண்ணாமலை விமர்சனம்

நூல் வெளியீட்டு விழாவில் ‘என் தம்பி ஞானசேகரன்’ என சபாநாயகர் அப்பாவு பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக நிர்வாகிகள் உடன் இருக்கும் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ஞானசேகரன் திமுக அனுதாபிதானே தவிர, திமுக உறுப்பினர் கிடையாது’ என விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் நிரஞ்சன் எழுதிய ‘இந்தியா வென்றது’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவுவின் பேச்சை பகிர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் திரு அப்பாவு அவர்கள், அங்கிருந்த ஞானசேகரன் என்ற நபரைக் கேலி செய்ய, அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனைக் குறிப்பிட்டு, “தம்பி ஞானசேகரன்” என்று பேசியுள்ளார்
திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத் தானே செய்யும். தன்னை அறியாமல் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் திரு. அப்பாவு.
பாலியல் குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரனுக்குப் பக்கபலமாக இருந்த அந்த “சார்” யாரென்று, இன்று வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.
தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவு அவர்களே?
யூடர்ன் நிறுவனம் விளக்கம்
இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு பேசியதை திரித்து பரப்புவதாக உண்மை கண்டறியும் நிறுவனமான யூடர்ன் விளக்கம் அளித்து உள்ளது.
இது தொடர்பாக பதிவிடப்பட்ட ‘எக்ஸ்’ வலைத்தள பதிவில், சபாநாயகர் பேசியதைத் திரித்துப் பரப்புகின்றனர். ஊடகவியலாளர் நிரஞ்சன் அவர்கள் எழுதிய ’இந்தியா வென்றது’ புத்தக வெளியீட்டு விழாவில், சபாநாயகர் அப்பாவுவிற்கு ஞானசேகரன் என்பவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். இவர் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடையவர் கிடையாது. அந்நபரின் பெயர் குறித்து அப்பாவு அந்த மேடையிலேயே பேசியுள்ளார். பெயர் ஒரே மாதிரி இருப்பதால் திரித்துப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.
இந்த பெயரை கொண்டு சர்ச்சை எழக்கூடுமென அப்பாவு கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையிலேயே ஊடகவியலாளர் இந்திரகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
