‘எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பது தான் 2026 தேர்தல் களம்’ எஸ்.பி.வேலுமணி பேச்சு!
‘மூன்று மாதத்தில் போய்விடும், நான்கு மாதத்தில் போய்விடும் என்று அவரது ஆட்சியை சொல்லிக் கொண்டிருந்தார்கள். 4 ஆண்டுகள் 3 மாதம் முழுமையாக ஆட்சி செய்து, மக்களுக்குத் தேவையான திட்டங்களை முழுமையாக செய்த முதலமைச்சராக இருந்தார்’

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா பேரவை சார்பில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
எடப்பாடி பெயரில் தான் நாம் வெற்றி பெறுவோம்
‘‘எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லி தான், 2026ல் நாம் வெற்றி பெறப் போகிறோம். அம்மா பேரவை சார்பாக, அவரின் பிறந்தநாளை கொண்டாடப் போகிறோம் என்பது மகிழ்ச்சியான விசயம். அந்த பெருமை, நம்முடைய அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமாரை சேரும்.
இந்த பிறந்த நாள் முடிந்து, அடுத்த பிறந்தநாள் வரும் போது அவர் முதலமைச்சராக இருப்பார். எனவே இந்த பிறந்தநாளை நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும். நம் தலைவரை நாம் தான் பாராட்ட முடியும், நாம் தான் கொண்டாட முடியும். அவரை வைத்து தான் நாம் ஓட்டு வாங்கப் போகிறோம், எடப்பாடியாருக்கு ஓட்டு போடுங்கள் என்று தான் நாம் கேட்கப் போகிறோம். 2026 தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமியா? மு.க.ஸ்டாலினா? என்றால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்றும்.
மக்களுக்கான திட்டங்களை தந்த முதல்வர்
சும்மா ஒன்றும் அவர் பொதுச் செயலாளராக வந்துவிடவில்லை, கடுமையான உழைப்பு. 89ல் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றவர், அம்மாவின் விசுவாசமானவராக இருந்தனர். தலைவர் காலத்திலேயே கிளை செயலாளராக இருந்தவர். கடுமையான உழைப்பாளி. அவர் ஆட்சி செய்த நான்கரை ஆண்டுகளில் அற்புதமான திட்டங்களை தந்தவர்.
மக்களுக்கான திட்டங்களை தந்த ஒரே முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். மருத்துவ மாணவர்களுக்காக 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்ததிலிருந்து, அத்தனை சாதனைகளையும் தீர்மானத்தில் போட்டுள்ளீர்கள். மூன்று மாதத்தில் போய்விடும், நான்கு மாதத்தில் போய்விடும் என்று அவரது ஆட்சியை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
எளிமையாக யாரும் சந்திக்கலாம்
4 ஆண்டுகள் 3 மாதம் முழுமையாக ஆட்சி செய்து, மக்களுக்குத் தேவையான திட்டங்களை முழுமையாக செய்த முதலமைச்சராக இருந்தார். நாங்கள் கோவையில் 10க்கு 10, 11க்கு 11 ஜெயித்தோம் என்றால், அதற்கு காரணம், அவர் செய்த திட்டங்கள் தான், மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகப்பெரிய வளர்ச்சி. திண்டுக்கல், மதுரை, சென்னை, நாகை என எல்லா மாவட்டங்களிலும் வளர்ச்சியை தந்தோம். எல்லா வளர்ச்சியையும் தந்தவர் எடப்பாடி பழனிசாமி. கேட்டதை எல்லாம் தந்தார். எளிமையாக யார் வேண்டுமானாலும் அவரை போய் சந்திக்கலாம். அப்படிப்பட்ட ஒரு எளிமையானவருக்கு தான் நாம் பிறந்தநாள் கொண்டாடப் போகிறோம்,’’
என்று எஸ்.பி.வேலுமணி அப்போது பேசினார்.
