Singappenney: மதராஸ் மாகாணத்தின் முதல் இந்து பட்டதாரி பெண்! யார் இந்த ஆர்.எஸ்.சுபலட்சுமி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Singappenney: மதராஸ் மாகாணத்தின் முதல் இந்து பட்டதாரி பெண்! யார் இந்த ஆர்.எஸ்.சுபலட்சுமி!

Singappenney: மதராஸ் மாகாணத்தின் முதல் இந்து பட்டதாரி பெண்! யார் இந்த ஆர்.எஸ்.சுபலட்சுமி!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Dec 20, 2023 05:15 AM IST

தனது வாழ்நாளின் தொடக்கத்தில் ‘லிட்டில் விடோ’ என்றே அறியப்பட்ட கைம்பெண் சுப லட்சுமி தனது கல்வியால் தன் வாழ்வை மீட்டுறுவாக்கம் செய்ததோடு ஆயிரக்கணக்கான பெண்களை கல்வியின் பால் ஈர்க்கும் கருவியாக செயல்பட்டார் ஆர்.எஸ்.சுபலட்சுமி.

மதராஸ் மாகாணத்தின் முதல் இந்து பட்டதாரி பெண் ஆர்.எஸ்.சுபலட்சுமி
மதராஸ் மாகாணத்தின் முதல் இந்து பட்டதாரி பெண் ஆர்.எஸ்.சுபலட்சுமி

மதராஸ் மாகாணத்தின் முதல் முதல் இந்து பட்டதாரி பெண் ஆர்.எஸ். ஆர்.எஸ்.சுப லட்சுமி நினைவு நாள் இன்று இந்த நாளில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம்

பிறப்பு

சகோதரி சுப லட்சுமி என்று அழைக்கப்பட்ட ஆர். எஸ் சுப லட்சுமி சென்னையில் மயிலாப்பூரில் ஒரு பிராமண குடும்பத்தில் 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை சுப்பிரமணிய ஐயர். தாயார் விசாலாட்சி. தந்தை சுப்ரமணிய ஐயர் அரசு பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றியவர். தஞ்சை வைகளத்தூர்தான் இவர்களது பூர்வீகம்

கல்வி

சுப லட்சுமி கல்வியில் சிறு வயது முதலே மிகுந்த ஆர்வம் இருந்தது. சைதாப்பேட்டையில் தனது ஆரம்பக் கல்வியை தொடங்கினார்.

1898 இல் சுப லட்சுமியின் 11 வது வயதில் இந்து குல முறைப்படி திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடந்து சில காலத்திலேயே தனது கணவரை இழந்தார். இதையடுத்து கல்வியின் மீது இருந்த ஆர்வத்தால் சுப லட்சுமி எழும்பூரில் இருந்த பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் பயிற்சிப் பள்ளியில் தனது கல்வியை தொடர்ந்தார். 1905 இல் நடந்த மெட்ரிகுலேஷன் தேர்வில் எல்லா பாடங்களிலும் முதல் மாணவியாக தேறினார். கல்வி மட்டும் இன்றி வீணை மீட்டுவதிலும் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

1898 இல் பின்னர் ஜார்ஜ் டவுனில் இருந்த பிரசன்டேஷன் கான்வென்டில் எப்.ஏ வகுப்பில் சேர்ந்தார். இதையடுத்து 1908ல் பி.ஏ வகுப்பில் சேர்ந்து 1911 ஆம் ஆண்டு முதல் பிராமண குடும்பத்து பட்டதாரியாகவும் தென்னகத்தின் முதல் பட்டதாரி பெண்மணியாகவும் தேர்வு பெற்றார். இதை எடுத்து பொது விஷயங்களுக்காக சுபலட்சுமி செயல்பட தொடங்கினார். இல்லத்தரசிகள் மற்றும் பிற பெண்களுக்கு சமூக பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கு சாரதா இல்லத்தை தொடங்கினார்.

மேலும் விதவைகளுக்கு கல்வி கற்பதற்கும் அவர்களுக்கு ஒரு சந்திப்பு மைதானம் மற்றும் மேடையை வழங்குவதற்காக சாரதா பெண் சங்கத்தை தொடங்கினார். இதேபோல் சாரதா வித்யாலயா, சாரதா மந்திர், சாரதா லேடிஸ் யூனியன், மயிலாப்பூர் லேடிஸ் கிளப், மதராஸ் மீனவ குப்பம் பள்ளி, கடலூர் சேரிப்பள்ளி ஆகியவற்றை தோற்றுவித்தார். அன்னிபெசண்ட் அம்மையாரின் குழந்தை திருமண வயதை உயர்த்தும் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக நடந்த 1927ல் பூனாவில் நடந்த அனைத்திந்திய பெண்கள் கல்வி சீர்திருத்தத்திற்கான மாநாட்டில் கலந்துகொண்ட ஐம்பத்தெட்டு முக்கியப் பிரதிநிதிகளில் சுப லட்சுமியும் ஒருவர்.

இப்படி தனது வாழ்நாளின் தொடக்கத்தில் ‘லிட்டில் விடோ’ என்றே அறியப்பட்ட கைம்பெண் சுப லட்சுமி தனது கல்வியால் தன் வாழ்வை மீட்டுறுவாக்கம் செய்ததோடு ஆயிரக்கணக்கான பெண்களை கல்வியின் பால் ஈர்க்கும் கருவியாக செயல்பட்டார்.

அந்த வகையில் தமிழகத்தில் பெண்கல்விக்கான ஆணிவேர்களில் ஒருவராக செயல்பட்ட ஆர்.எஸ் சுப லட்சுமி 20 டிசம்பர் 1969ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இந்தியா விடுதலை பெற்ற பின் இவருக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தின் பெண்கல்வியில் முக்கியத்துவமான பங்கு சுபலட்சுமிக்கு இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9