வழக்கு போடாமல் இருக்க கை நீட்டிய சிறப்பு எஸ்.ஐக்கு காப்பு
Police Arrested : வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள சந்தம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் பஞ்சலிங்கம். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் அவருடைய தாயார் தனலட்சுமி ஆகியோருக்கும் இடையே கடந்த 22ம் தேதி டிப்பர் லாரி நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் சுல்தான்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் (58) என்பவர் பஞ்சலிங்கத்தை செல்போனில் தொடர்புகொண்டு, உங்கள் மீது புகார் வந்துள்ளது. உடனே போலீஸ் நிலையம் வாருங்கள் எனக்கூறி உள்ளார்.
அங்கு இருதரப்பினரிடமும் விசாரணை நடத்திய அவர், புகார் பெறப்பட்டதற்கான சி.எஸ்.ஆர் ரசீது வழங்கினார். மேலும் பஞ்சலிங்கத்திடம் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யாமல் சி.எஸ்.ஆர். மட்டும் போட்டு உங்களை காப்பாற்றி உள்ளேன். இதற்காக எனக்கு லஞ்சமாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் கேட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து,அடுத்த நாள் பணம் தருகிறேன் என்று கூறிச்சென்றார். பின்னர் மறுநாள் காலையில் பஞ்சலிங்கத்தை ரவிச்சந்திரன் தொடர்புகொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் ரூ.4 ஆயிரம் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பஞ்சலிங்கம் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் பஞ்சலிங்கத்திடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை கொடுத்து அனுப்பிவிட்டு மறைந்து நின்றனர்.
சுல்தான்பேட்டை போலீஸ் நிலையம் அருகே ஒரு கோயில் முன்பு, சிறப்பு எஸ்ஐ ரவிச்சந்திரன் பஞ்சலிங்கத்திடம் இருந்து ரூ.4 ஆயிரம் வாங்கினார். அப்போது அவரை சுற்றி வளைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்