சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. செந்தில் பாலாஜியின் சகோதரர் நேரில் ஆஜர்.. பிணைதொகையை கட்டச்சொல்லி வழக்கு ஒத்திவைப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் நேரில் ஆஜரான நிலையில் பிணைதொகையை கட்டச்சொல்லி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆன வழக்கில், குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்.25-க்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஏப்ரல் 20ஆம் தேதி ஜாமீன் உத்தரவாத தொகையாக தலா ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில் இன்று நேரில் ஆஜர் ஆகியிருக்கிறார், அசோக் குமார். குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஆஜராகி இருக்கிறார். இதன்மூலம் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் பொதுவெளிக்கு வந்துள்ளார்.
செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக, 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர், அமலாக்கத்துறையினர். அப்போது அவர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின், சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2014ஆம் ஆண்டு பிணையில் வெளியே வந்து மீண்டும் திமுக அரசில் அமைச்சர் ஆனார்.