’நானும், நமிதாவும் முருக பக்தைகள்! இதில் அரசியல் இல்லை’ தமிழிசை சௌந்தராஜன் பேட்டி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’நானும், நமிதாவும் முருக பக்தைகள்! இதில் அரசியல் இல்லை’ தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

’நானும், நமிதாவும் முருக பக்தைகள்! இதில் அரசியல் இல்லை’ தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

Kathiravan V HT Tamil
Published Jun 21, 2025 11:53 AM IST

”முருகன் மாநாடு தேசிய ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும், சமூக விரோத நடவடிக்கைகளை அழிக்க முருகனின் வேல் உதவும் என்றும் பேட்டி”

’நானும், நமிதாவும் முருக பக்தைகள்! இதில் அரசியல் இல்லை’ தமிழிசை சௌந்தராஜன் பேட்டி
’நானும், நமிதாவும் முருக பக்தைகள்! இதில் அரசியல் இல்லை’ தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெற்ற யோகாசன நிகழ்வுக்கு பின்னர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன், நடிகை நமிதாவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் நடைபெறவுள்ள முருகன் பக்தர்கள் மாநாடு, தமிழக அரசின் மதப் பாகுபாடு, மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்தார். 

முருகன் மாநாட்டில் அரசியல் இல்லை

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து பேசிய தமிழிசை, “நானும் நமிதாவும் முருக பக்தைகள். இந்த மாநாடு அரசியல் மாநாடு அல்ல, அரசியல் பேசப்படவும் இல்லை. ஆனால், இது தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கு வித்திடும். மாநாட்டு பந்தல் ஏற்கனவே நிரம்பி வழிகிறது. இதைப் பார்த்து தமிழக அரசுக்கு பயமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதும், அறிக்கைகள் விடுவதும் இதற்கு சான்று,” என்றார். மாநாடு தேசிய ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும், சமூக விரோத நடவடிக்கைகளை அழிக்க முருகனின் வேல் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக அரசு மீது கடும் விமர்சனம்

தமிழக அரசு இந்துக்களை பாகுபாட்டுடன் நடத்துவதாக தமிழிசை குற்றம்சாட்டினார். “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 3,000 குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றில் கூட பங்கேற்கவில்லை. தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கோயில்களில் மத அடையாளங்களை அழித்துவிட்டு புகைப்படம் எடுக்கும் அளவுக்கு இந்து மதத்தை அவமதிக்கிறார். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இனி இந்துக்களை பாகுபாட்டுடன் நடத்த முடியாது,” என்று கூறினார்.

சமூகப் பிரச்சினைகள் 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அரசு மக்கள் நலப் பணிகளில் தோல்வியடைந்துள்ளதாகவும் தமிழிசை விமர்சித்தார். “பாலியல் பலாத்காரங்கள், படுகொலைகள், துப்பாக்கி கலாச்சாரம், காவல் நிலையங்கள் மீதான தாக்குதல்கள், காவல்துறை அதிகாரிகள் கைது ஆகியவை மிகவும் கவலை அளிக்கின்றன. முதலமைச்சர் திறந்து வைத்த கட்டிடங்கள் கூட சரியாக இல்லை. தஞ்சாவூரில் 4 கோடி மதிப்பிலான கட்டிடம் இடிந்து விழுந்தது. 37 கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஒரு புதிய ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை,” என்று குற்றம்சாட்டினார்.

மாங்காய் தொழிற்சாலை மூடல் 

விவசாயிகளின் நலன் குறித்து பேசிய தமிழிசை, “தமிழகத்தில் ஒரே ஒரு மாங்காய் கூழ் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. ஆந்திராவில் மானியம் வழங்கப்படுவதால், இங்குள்ள மாங்காய்கள் அங்கு செல்கின்றன. மாங்காய்களை தெருவில் கொட்டி வீணாக்குவது விவசாயிகளின் வேதனையை காட்டுகிறது. இதைப் பற்றி பேச திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை,” என்றார். மாங்காய் தொழிற்சாலையை மீண்டும் திறந்தால் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் முயற்சிகள்

மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்த தமிழிசை, “ஜல் சக்தி மிஷன் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படுகிறது. 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. மூன்று மாத அரிசியை முன்கூட்டியே வாங்கி வைக்கச் சொல்லியும், தமிழக அரசு மட்டும் அதை செய்யவில்லை. ரேஷன் கடைகளில் இடமில்லை, பணியாளர்கள் இல்லை என்கின்றனர். இது அரசின் தோல்வியை காட்டுகிறது,” என்று குறிப்பிட்டார்.

கீழடி அகழ்வாராய்ச்சி

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பேசிய தமிழிசை, “பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே கீழடியில் முழுமையான அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் மத்திய அரசு ஆய்வு நடத்தியுள்ளது. திமுக இதற்கு முழு பங்கு எடுத்துக்கொள்ள முடியாது,” என்று தெரிவித்தார்.

எதிர்கால அரசியல்

தமிழகத்தில் அடுத்த 10 மாதங்களில் மாற்றம் ஏற்படும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார். “10 மாதங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற அழகான குழந்தை தமிழகத்தில் பிறக்கும். அது ஆட்சியைப் பிடிக்கும். திமுக கூட்டணி பலவீனமாக உள்ளது. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது,” என்று கூறினார்.