தமிழ்நாடு சட்டப்பேரவை: ‘எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்’!
தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று குறிப்பிட்டு செங்கோட்டையன் பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அவர்களை வணங்கி என்று சொல்லி செங்கோட்டையன் உரையைத் துவங்கியிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன், ‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்திய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியாரை வணங்கி உரையைத் தொடங்குகிறேன்’ எனத் தெரிவித்தார். இது அங்கிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிக்க வைத்த சபாநாயகர்:
அப்போது நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித்தலைவர் எனக் குறிப்பிட்டு செங்கோட்டையன் பேசியதற்கு, ’நல்லாட்சி நடத்திக் கொண்டிருப்பது எங்கள் முதலமைச்சரா அல்லது வேறா? ’ என செங்கோட்டையனிடம் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
அதற்கு ‘நல்லாட்சி’ என்றுதானே நான் குறிப்பிட்டேன்; ‘என்னை எப்படி சிக்கவைக்குறீங்க’ என சிரித்துக்கொண்டே செங்கோட்டையன் பதில் கூறினார். இதனால் அவையில் கலகலப்பு நிலவியது.
நேற்று ஆப்சென்ட்; இன்று புகழுரை:
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நேற்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து அளித்தார். அதில் சிக்கன், மட்டன் பிரியாணி, மீன், முட்டை, இறால் என 6 வகை அசைவ உணவுகள் முக்கிய இடம் பிடித்தன. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக சட்டப்பேரவையில் புகழுரை நிகழ்த்தியிருக்கிறார்.

டாபிக்ஸ்