‘கட்சிக்காரர்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி போடும் திமுகவினர், தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் வைக்காதது ஏன்?’ செல்லூர் ராஜூ!
”திமுகவின் இத்தகைய செயல்கள் மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணமின்றி, வெறுமனே லஞ்சம் மற்றும் ஓட்டு வாங்குவதற்காக மேற்கொள்ளப்படுவதாக செல்லூர் ராஜு விமர்சித்தார். "மக்கள் இப்போது செருப்பை தூக்கி அடிக்கும் மனநிலையில் உள்ளனர்”

கட்சிக்காரர்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி போடும் திமுகவினர், மக்கள் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் வைக்காதது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பாக நடத்தப்பட்ட நீர்மோர் பந்தல் மீது காவல்துறை மற்றும் ஆளுங்கட்சியினரால் விதிக்கப்பட்ட தடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாகக் கண்டித்துள்ளார். மதுரை விளாங்குடி பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தச் சம்பவத்தை "தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அநீதி" என்று விமர்சித்த அவர், ஆளுங்கட்சியின் அராஜகமும், காவல்துறையின் பாரபட்சமான நடவடிக்கைகளும் மக்களுக்கு எதிரானவை எனக் குற்றம்சாட்டினார்.
நீர்மோர் பந்தல் மீதான தடை
மதுரை மேற்கு தொகுதியின் 20வது வார்டில், அண்ணா திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதற்கு முறையாக காவல்துறை மற்றும் மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும், இரண்டு நாட்களுக்குப் பிறகு கூடல்நகர் காவல் நிலைய அதிகாரிகள் இந்தப் பந்தலை அகற்றியதாக செல்லூர் ராஜு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டதாகவும், இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் அனுமதி பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆளுங்கட்சியின் அராஜகம்
திமுக ஆளுங்கட்சியை "திராவிட மாடல் ஆட்சி" என்று கிண்டலடித்த செல்லூர் ராஜு, இந்தச் சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் பினாமிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இவர்கள் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டி, அதிமுகவின் நிகழ்ச்சிகளைத் தடுப்பதாகவும், இதற்கு பின்னணியில் பண பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
திமுகவின் இத்தகைய செயல்கள் மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணமின்றி, வெறுமனே லஞ்சம் மற்றும் ஓட்டு வாங்குவதற்காக மேற்கொள்ளப்படுவதாக செல்லூர் ராஜு விமர்சித்தார். "மக்கள் இப்போது செருப்பை தூக்கி அடிக்கும் மனநிலையில் உள்ளனர்," என்று கூறிய அவர், இந்தப் பகுதியில் தாய்மார்கள், பெரியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் இத்தகைய தடைகளால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். கட்சிக்காரர்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி போடும் திமுகவினர், மக்கள் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் வைக்காதது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சி மீது விமர்சனம்
திமுக ஆட்சியில் அமைச்சரவை மாற்றங்கள், குறிப்பாக துரைமுருகனின் இலாக்கா மாற்றம் குறித்து பேசிய செல்லூர் ராஜு, இந்த ஆட்சியில் பெரும்பாலான அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஜாமீனில் உள்ளவர்கள் என்று குற்றம்சாட்டினார். "மொந்தை மாறினாலும் கள் ஒன்றுதான்," என்று கூறிய அவர், எல்லாத் துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் சர்வசாதாரணமாக நடப்பதாக விமர்சித்தார்.
திமுகவின் ஆட்சி நீடிக்காது என்றும், 2026ல் அண்ணா திமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்திற்கு "விமோசனம்" கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் குறித்து பேசிய செல்லூர் ராஜு, பாகிஸ்தானுக்கு இந்தியா தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்து வருவதை வரவேற்பதாகத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமையில் இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாக வலுவாக உள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
திமுகவின் தலைவர்கள் ராணுவ வீரர்களை மட்டும் பாராட்டுவதை "நாடகம்" என்று விமர்சித்த அவர், மத்திய அரசின் பங்களிப்பை அங்கீகரிக்காமல், அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய பாராட்டுகளை திமுக மேற்கொள்வதாக குற்றம்சாட்டினார்.
