மதுரை பொதுக்குழு: ’தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்ட திமுக’ கலாய்க்கும் செல்லூர் ராஜூ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மதுரை பொதுக்குழு: ’தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்ட திமுக’ கலாய்க்கும் செல்லூர் ராஜூ!

மதுரை பொதுக்குழு: ’தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்ட திமுக’ கலாய்க்கும் செல்லூர் ராஜூ!

Kathiravan V HT Tamil
Published Jun 02, 2025 02:34 PM IST

”1977ல் மதுரையில் பொதுக்குழு நடத்தினர், அடுத்த 12 ஆண்டுகள் வனவாசம் போய்விட்டார்கள். அதுபோலவே இப்போதும் மதுரையில் மதுரையில் பொதுக்குழு கூட்டியுள்ளனர்”

மதுரை பொதுக்குழு: ’தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்ட திமுக’ கலாய்க்கும் செல்லூர் ராஜூ!
மதுரை பொதுக்குழு: ’தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்ட திமுக’ கலாய்க்கும் செல்லூர் ராஜூ!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக பொதுக்குழுவை கடுமையாக விமர்சித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யாமல் வந்திருப்பதாகவும், திமுக பொதுக்குழுவில் மக்கள் கூட்டம் தானாக சேர்ந்தது இல்லை என்றும் அவர் சாடினார்.

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு குறித்து கருத்து தெரிவித்த செல்லூர் ராஜூ, "முதல்வர் மதுரைக்கு வந்து எந்த நலத்திட்டங்களையும் அறிவிக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் கூடியதாக திமுக கூறினாலும், வந்தவர்கள் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை, அழைத்து வரப்பட்ட கூட்டம். மக்கள் யாரும் முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று தன்னெழுச்சியாக வரவில்லை. 30-40 ஆயிரம் பேர் மட்டுமே கூடினர், அதிலும் பாதி பேர் சென்றுவிட்டனர்" என்றார்.

திமுக ஆட்சியில் மதுரைக்கு எந்த பயனும் இல்லை 

சாலைகள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் குறித்தும் செல்லூர் ராஜூ விமர்சித்தார். "ரோடு ஷோ, பொதுக்குழு எல்லாம் முடிந்துவிட்டது, ஆனால் இன்னும் பேரிகார்டுகளை அகற்றவில்லை. முதல்வர் வரும்போது போக்குவரத்தை நிறுத்துவது சகஜம் தான். ஆனால், 3 மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கினர். தொகுதிக்கு 10 கோரிக்கைகள் முதல்வர் கேட்டார், நாங்களும் கொடுத்தோம், ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

மதுரை தொகுதிகளை கைப்பற்றும் திமுகவின் எண்ணம் குறித்து பேசிய அவர், "மதுரையிலுள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என திமுக நினைக்கிறது. ஆனால், மக்கள் நினைக்கவில்லையே. மக்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கானோர் கூடியிருப்பார்கள், இன்னொரு சித்திரைத் திருவிழாவாக அமைந்திருக்கும்" என்றார்.

பொது விவாதத்திற்கு அதிமுக தயார் 

அதிமுக ஆட்சியில் மதுரைக்கு செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பொது விவாதத்திற்கு தயாராக இருப்பதாக செல்லூர் ராஜூ சவால் விடுத்தார். "மதுரைக்கு அதிமுக என்னென்ன செய்தது என நாங்கள் பட்டியலிட தயார். பொது விவாதத்துக்கு தயார். நீங்கள் தயாரா?" என்று திமுகவுக்கு சவால் விடுத்தார்.

பந்தல்குடி கால்வாய் திட்டம் கைவிடப்பட்டது குறித்தும் அவர் குறிப்பிட்டார். "பந்தல்குடி கால்வாயில் ஒரு பக்கம் இஸ்லாமியர், இன்னொரு பக்கம் பட்டியலின மக்கள் வசிக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் கால்வாயை சீரமைக்க இரண்டேகால் கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுத்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அதனை கைவிட்டுவிட்டனர்" என்றார்.

திமுகவின் "வனவாசம்" தொடரும் 

திமுகவின் வரலாறு மற்றும் மதுரை பொதுக்குழுவின் விளைவுகள் குறித்து செல்லூர் ராஜூ தனது கருத்தை முன்வைத்தார். "தலைவர் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது 1971ல் மட்டுமே மீண்டும் ஆட்சியமைக்க முடிந்தது. அதன்பின், எம்.ஜி.ஆர் விலகி அதிமுகவை தொடங்கியதில் இருந்து, ஒருமுறைக்கு மறுமுறை திமுக ஆட்சிக்கு வந்ததேயில்லை. 1977ல் மதுரையில் பொதுக்குழு நடத்தினர், அடுத்த 12 ஆண்டுகள் வனவாசம் போய்விட்டார்கள். அதுபோலவே இப்போதும் மதுரையில் மதுரையில் பொதுக்குழு கூட்டியுள்ளனர், மீண்டும் வனவாசம் செல்லவுள்ளனர். யாரோ முதல்வரை ஏமாற்றி மதுரையில் பொதுக்குழு நடத்த வைத்திருக்கிறார்கள். மதுரையில் பொதுக்குழு நடத்தி தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டது திமுக" என்று கூறி தனது பேட்டியை முடித்தார்.