Seeman: பணக்கொழுப்பு இருப்பவர்களுக்கு தான் இது தேவைப்படும்.. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும்? - சீமான்!
Seeman : தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காமராஜர், அண்ணா, ஓமந்தூரார் போன்றவர்களெல்லாம் வியூக நிபுணர்களை வைத்துத் தான் அரசியல் செய்தார்களா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும். பண கொழுப்பால் தவெக தலைவர் விஜய்யும், பிரசாந்த் கிஷோரும் ஒன்றிணைந்ததாக நாம் தமிழர் கட்சி சீமான் குற்றச்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே பிரம்மதேசம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் சீமானுக்கும் பாமகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலால் பாமகவினர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்தனர்.
சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி
அந்த புகாரின் பேரில் செய்யாறு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு இன்று முதன்முறையாக வழக்கில் ஆஜராக செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று வழக்கில் ஆஜரானார் சீமான். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும்? தமிழ்நாட்டில் எத்தனை ஆறு, குளங்கள் இருக்கிறது என அவருக்கு தெரியுமா? எந்தப் பகுதியில் எந்தெந்த சமூகங்கள் இருக்கு என்று அவருக்கு தெரியுமா? தமிழ்நாட்டில் உள்ள பிரதான பிரச்சனைகளை பற்றி அவருக்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பினார்.
பணக்கொழுப்பு இருப்பவர்களுக்குத் தான் இதுபோன்ற வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படும். அதைப் பற்றிப் பேசி காலத்தை வீணடிக்க வேண்டாம். தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காமராஜர், அண்ணா, ஓமந்தூரார் போன்றவர்களெல்லாம் வியூக வகுப்பாளர்களை வைத்துத் தான் அரசியல் செய்தார்களா?. தமிழ்நாட்டில் எதைச் செய்தால் எது சரியாக இருக்கும் என்பதைத் தெரியாமல் எப்படி அரசியலில் இருக்க முடியும் என்று விஜய்யை மறைமுகமாக சாடினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லா தலைவர்களும் எல்லா சிலைகளுக்கு மாலை போட முடியுமா? ஆனால் என்னால் மட்டும் தான் எல்லா தலைவர்கள் சிலைக்கு மாலை போட முடியும்” என பேசியுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்