’ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
“மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது”

ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் கலை மற்றும் கல்வித் திறன்களை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். ‘கலை சிற்பி’ திட்டம், கல்லூரி களப்பயணங்கள், தொல்லியல் பயிற்சி, மற்றும் மாணவர்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் முயற்சிகள் உள்ளிட்டவை அவரது உரையில் முக்கிய இடம்பெற்றன.
‘கலை சிற்பி’ திட்டம்: மாணவர்களுக்கு பயிற்சி
மாணவர்களின் கலைத் திறன்களை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘கலை சிற்பி’ திட்டத்தைப் பற்றி அமைச்சர் விளக்கினார். “மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஓவியம் உள்ளிட்ட கலைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆறு நாட்கள் தங்கியிருந்து பயிற்சி வழங்கப்பட்டது,” என்றார். இந்தப் பயிற்சி மாணவர்களுக்கு புதிய கண்ணோட்டத்தை அளித்ததாகவும், வல்லுநர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.