VarunKumar IPS vs Seeman: ’யார் அந்த தொழிலதிபர்? சொல்ல முடியுமா?’ வருண் குமாருக்கு சாட்டை துரைமுருகன் கேள்வி
VarunKumar IPS vs Seeman: 36 லட்சம் மக்களால் வாக்கு செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில கட்சி மாவட்ட கண்காணிப்பாளரை எதற்கு எதிர்க்க வேண்டும்? என நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக கூறிய தொழிலதிபர் யார் என்பதை சொல்ல முடியுமா என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
வழக்கு தொடர்ந்த வருண்குமார்
தன்னை பற்றியும், தனது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி எஸ் பி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 ல் அவரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சீமான் மீதான வழக்கில் ஆஜர்
அந்த வழக்கிற்காக நீதிபதி உத்தரவின் அடிப்படையில் எஸ் பி வருண்குமார் இன்று குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி(பொறுப்பு) பாலாஜி முன்பு நேரில் ஆஜராகினார். அவரிடம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும், தன்னுடைய கடமையை செய்ததற்காக, தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் பொதுவெளியிலும் என் குறித்து பேசினார், குறிப்பாக ஜாதி உள்ளிட்டவை குறித்து பகிரங்கமாக பொதுவெளியில் சீமான் பேசினார். மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியுள்ளார் என்பது தொடர்பான கருத்துக்களை வரண்குமார் தெரிவித்தார். அதனை நீதிபதி பாலாஜி முழுமையாக பதிவு செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சீமான் மீது வருண்குமார் விமர்சனம்
‘என்னைப் பற்றி அவதூறாக பேசிய சீமான், தொழிலதிபர் ஒருவர் மூலமாக என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார், அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிவிட்டேன்’ என்று திருச்சி எஸ்.பி ஆக இருந்து, டிஐஜி.,ஆக பதவி உயர்வு பெற்றுள்ள வருண் குமார் ஐபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.
வருண் குமார் ஐபிஎஸ்க்கு சாட்டை துரைமுருகன் கேள்வி
இந்த நிலையில் வருண்குமாரின் விமர்சனம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் ட்வீட் செய்துள்ளார். அதில், நேற்று திருச்சியில் வருண்குமார் என்பவர் தனிப்பட்ட முறையில் (அதிகாரியாக வரவில்லை என அவரே சொல்கிறார்) அண்ணன் சீமான் அவர்கள் குறித்து பொதுவெளியில் பொய்யான தகவல்களை பரப்பி இருக்கிறார்!
தொழிலதிபர் மூலமாக அண்ணன் சீமான் அவர்கள் தனக்கு செய்தி அனுப்பியதாக சொல்லும் வருண்குமார் ,யார் அந்த தொழிலதிபர் என்பதைச் சொல்வாரா ?
மைக் கிடைத்தால் என்ன வேண்டுமென்றாலும் பேசுவீங்களா வருண் ?
நாம்தமிழர் கட்சிக்கும் உங்களுக்கும் மோதல் என சொல்றீங்க ?
36 லட்சம் மக்களால் வாக்கு செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில கட்சி மாவட்ட கண்காணிப்பாளரை எதற்கு எதிர்க்க வேண்டும் ?
உங்களின் பொய் வழக்குகளும் வழக்கின் போது பறிக்கப்பட்ட அலைபேசிகளை வைத்து நீங்கள் செய்யும் மூன்றாம் தர வேலைகளையும் பொது சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது !
நீங்கள் போன அதே நீதிமன்றத்தில் நீங்கள் எங்களுக்கு எதிராக செய்த மூன்றாம் தர வேலைகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்துகிறோம் !
சட்டமும் நீதியும் யார் பக்கம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் !
மற்றபடி மன்னிப்பு என்பது அண்ணன் சீமானின் வரலாற்றிலேயே கிடையாது.
யார் தூது விட்டது ?யார் கெஞ்சியது? யார் பத்திரக்கையாளர்களை அனுப்பி பேசியது ?என்பதை விலாவாரியாக பேசுவோம்!