தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்:உயர் நீதிமன்றம்
மதுரை: திருச்சி மலைக்கோட்டை குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அதை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட கோரி வழக்கில், தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டு என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த சவுந்தராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டையில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பல்லவர் குகைக் கோயில் உள்ளது. இந்த குகைக் கோயிலை ஒட்டி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்தக் கட்டிடத்தால் குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, குகைக் கோயிலை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், "பல்லவர் குகைக் கோயில் அருகே உள்ள இடம் ரோசன் என்பவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குடோன் கட்டியுள்ளார். அதனால் குகைக் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் நாட்டின் கலாச்சாரம், கலை, பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. இவற்றை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும். தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பல்லவர் குகைக் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர், திருச்சி மண்டல மத்திய தொல்லியல் அதிகாரி ஆகியோர் 4 வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆய்வில் கட்டிடத்தால் குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியவந்தால் அதை சட்டப்படி அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
டாபிக்ஸ்