RN Ravi vs MK Stalin: ’ஆளுநர் உரை விவகாரத்தில் முதலமைச்சரின் ஆணவம் நல்லதல்ல!’ ஆளுநர் மாளிகை எச்சரிக்கை!
RN Ravi vs MK Stalin: பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல.

இந்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையை வாசிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில், ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து தரப்பட்ட விளக்கத்தில், “இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலைப்பு கடமையை மரியாதை உடன் நிறைவூட்டியதுடன், தேசிய கீதத்தை பாட சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் அவர்களிடமும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது கவலைக்குறிய விஷயம். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருக்க கூடாது என்பதால் ஆளுநர் வேதனை உடன் வெளியேறினார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடு சிறுபிள்ளைத் தனமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்து இருந்தார். அதில், “அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என அதில் குறிப்பிட்டு இருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்து உள்ளது. அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்.
பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள் என தெரிவித்து உள்ளார்.
