’4 ஆண்டுகளில் 7000 கொலைகள்’ திமுகவை சாடும் ஆர்.பி.உதயக்குமார்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’4 ஆண்டுகளில் 7000 கொலைகள்’ திமுகவை சாடும் ஆர்.பி.உதயக்குமார்

’4 ஆண்டுகளில் 7000 கொலைகள்’ திமுகவை சாடும் ஆர்.பி.உதயக்குமார்

Kathiravan V HT Tamil
Published Jun 10, 2025 02:12 PM IST

”சோழர் காலம் பொற்காலம் என்று சொல்லப்படுவது போல, ஸ்டாலின் காலம் "வேதனை காலம்" என்பது இன்றைக்கு மக்கள் மனதிலே பதிந்திருக்கிறது”

’4 ஆண்டுகளில் 7000 கொலைகள்’ திமுகவை சாடும் ஆர்.பி.உதயக்குமார்
’4 ஆண்டுகளில் 7000 கொலைகள்’ திமுகவை சாடும் ஆர்.பி.உதயக்குமார்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 7000 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தனிமனித பாதுகாப்பின்மை 

ஆர்.பி. உதயகுமார் தனது செய்தியாளர் சந்திப்பில், அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அணுகுண்டு விழுந்ததை போல அமைந்திருப்பதாக தெரிவித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு, ஊழல் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஏற்படுவது அனைவரும் அறிந்த பொதுவான ஒன்று என்றும், ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தந்தை மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தை விட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் "கின்னஸ் சாதனை" படைத்துள்ளார் என்று விமர்சித்தார். தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து, தமிழ்நாடு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சமீபகாலமாக தனியாக வசிப்பவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவதாகவும், பல்லடம் மூவர் கொலை, ஈரோடு இருவர் கொலை போன்ற சம்பவங்களை ஒரே கும்பல் செய்துள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்ட பிறகும், பரமத்தி வேலூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஒரே மாதிரியான கொலைகளுக்கு யார் காரணம் என்ற கேள்வியையும் எழுப்பிய உதயகுமார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "உள்ளே இருப்பவர்கள் உண்மை குற்றவாளிகளா அல்லது பொய் குற்றவாளிகளா, பினாமி குற்றவாளிகளா" என்று கேள்வி எழுப்பி அறிக்கை கொடுத்திருப்பதை நினைவுபடுத்தினார்.

குற்றவாளிகளுக்கு பயமில்லை

தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்கு காவல்துறை மீதோ, அரசு மீதோ துளியும் பயமில்லை என்று ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டினார். குற்றங்களை குறைக்க வேண்டிய அரசு, அதை மறைக்கவே பார்க்கிறது என்றும், இனிமேல் குற்றங்கள் நடைபெறாது என்ற நிலையை உருவாக்க அரசு தயாராக இல்லை என்றும் அவர் விமர்சித்தார். இந்த சூழலை குற்றவாளிகள் சாதகமாக்கிக் கொள்வதால் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்வது வேதனை அளிப்பதாகவும், தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானால், எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் மாநிலத்தில் ஏற்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

"பொம்மை முதலமைச்சர்" ஸ்டாலின் 

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது இந்த ஆட்சியின் அவலமாக பார்க்கப்படுகிறது என்றார் ஆர்.பி. உதயகுமார். சோழர் காலம் பொற்காலம் என்று சொல்லப்படுவது போல, ஸ்டாலின் காலம் "வேதனை காலம்" என்பது இன்றைக்கு மக்கள் மனதிலே பதிந்திருக்கிறது என்றும்,"பொம்மை முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பொறுப்பற்ற முறையிலான ஆட்சியால் தமிழ்நாடே தடுமாறுகிறது" என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடியார் தலைமையிலான அரசு அமைய மக்கள் தயார் 

இந்த அரசு உடனடியாக வீட்டுக்கு போக வேண்டிய அரசு என்றும், ஒவ்வொரு நாளும் இது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தினார். "தடுமாறும் தமிழ்நாட்டை தலைநிமிர செய்திட நமக்கான தலைவர் எடப்பாடியார் தான்" என்று குறிப்பிட்ட அவர், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றும், இந்த அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறினார். எங்கள் புரட்சி ஐயா எடப்பாடி அவர்களின் தலைமையிலே மிகப்பெரிய கூட்டணி மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகி விட்டார்கள் என்றும், முதலமைச்சராக புரட்சி தமிழர் ஐயா எடப்பாடியார் வர வேண்டும் என்றும், இப்போது இருக்கிற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வீட்டுக்கு போக வேண்டும் என்பதிலே மக்கள் தெளிவாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.