“கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தலைவர்களை அவமதிப்பது தவறு” முருகன் மாநாடு குறித்து ராமதாஸ் விமர்சனம்
பாமகவுக்குள் அன்புமணியுடனான மோதல் குறித்து கேட்கப்பட்டபோது, சமரசப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதுகுறித்து மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ராமதாஸ், தனது 60-வது திருமண விழாவில் மகன் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, “எந்தவொரு தந்தையும் தனது பிள்ளைகள் இல்லாதபோது மனவேதனை அடைவார்” என உணர்ச்சிபூர்வமாக பதிலளித்தார். மேலும், அன்புமணியின் பெயர் இடம்பெற்றிருந்த பாமக விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது குறித்து, இது தவறான பண்பாடு என்றும், இதற்குப் பின்னால் உள்ளவர்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
மதுரையில் நடைபெற்ற முருகர் மாநாடு தொடர்பாக, பெரியார் மற்றும் அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக எழுந்த கேள்விக்கு, மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறினார். “கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தலைவர்களை அவமதிப்பது தவறு” என அவர் வலியுறுத்தினார். அனைத்து அரசியல் கட்சிகளும் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.