Rain Alert: ‘இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யும்!’ இதோ முழு விவரம்!
”தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது”
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று புதிய புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (29-11-2023) காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைகால் பகுதிகளில் கடந்த அக்டோபர் ஒன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை பதிவான மழையின் அளவு 24 செ.மீ; சராசரி அளவு 27 செ.மீ என்பதால் இல்பை விட 13 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை பதிவாகி உள்ள நிலையில், இன்றைய தினம் காலை 7 மணி முதல் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.