வடகாடு கலவரம்: ஒரே சமூகத்தை சேர்ந்த 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வடகாடு கலவரம்: ஒரே சமூகத்தை சேர்ந்த 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது!

வடகாடு கலவரம்: ஒரே சமூகத்தை சேர்ந்த 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது!

Kathiravan V HT Tamil
Published May 06, 2025 04:33 PM IST

“வடகாடு கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் மதுபோதையில் இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக உருவெடுத்தது. சிறிய அளவில் தொடங்கிய பிரச்சினை பின்னர் கைகலப்பாக மாறி பெரிய அளவில் கலவரமாக வெடித்தது”

வடகாடு கலவரம்: ஒரே சமூகத்தை சேர்ந்த 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது!
வடகாடு கலவரம்: ஒரே சமூகத்தை சேர்ந்த 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு, ஒரு வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே சமூகத்தைச் சேந்த 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலங்குடி வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் மற்றும் டிஎஸ்பி முத்துராஜா ஆகியோர் நிகழ்விடத்தை பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர்.

"மதுபோதை பிரச்சினையால் மோதல்"

வடகாடு கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் மதுபோதையில் இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக உருவெடுத்தது. "சிறிய அளவில் தொடங்கிய பிரச்சினை பின்னர் கைகலப்பாக மாறி பெரிய அளவில் கலவரமாக வெடித்தது" என காவல்துறை தெரிவித்தது. இதில், மூன்று வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு, ஒரு வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் இப்பகுதியில் நடந்த சம்பவத்தில் ஆறு பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"14 பேர் கைது, வன்கொடுமை சட்டம் பாய்ந்தது"

காவல்துறையினர் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள மூன்று பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நான்கு பேரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 14 பேரும் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

"அமைதி நிலைநாட்டும் முயற்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்"

இரு தரப்பு மக்களிடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வெளிநபர்கள் இப்பகுதிக்குள் நுழையாதவாறு தடுக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், இன்று மாலை தீர்த்தவாரி கோயில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. வழக்கமாக நடைபெறும் மஞ்சள் தண்ணீர் தெளிக்கும் பழக்கத்திற்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் தடை விதித்துள்ளனர். இருப்பினும், சாமி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

"பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை மற்றும் நிவாரணம்"

பாதிக்கப்பட்ட மக்கள், "வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், எங்களது உயிருக்கு பாதுகாப்பு அவசியம்" என வட்டாட்சியரிடம் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், "பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்; சேத விவரங்கள் கணக்கிடப்பட்டு, அறிக்கையாக உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அரசு மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.