நான்குவழிச் சாலை அமைக்காமல் சுங்கச்சாவடி அமைப்பதா?.. திண்டுக்கல் அருகே வெகுண்டெழுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று திறக்கபட இருந்த சுங்கச்சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் எந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்காக திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழி சாலை மட்டுமே அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் இந்த இரு வழி சாலையில் வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரம் என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. ஆனால், நான்கு வழிச் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே, இன்று (மார்ச் 12) காலை சுங்கச்சாவடியை திறப்பதற்கு சுங்கசாவடி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திடீரென சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர். சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து உபகரணங்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது.
இதையடுத்து சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொள்ள அப்பகுதி திமுகவினரும் குவிந்து வருவதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வத்தலகுண்டு - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்