பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Pandeeswari Gurusamy HT Tamil
Published May 13, 2025 10:47 AM IST

இளம் பெண் ஒருவர் அடிக்காதீங்க அண்ணா என , தன்னை வேட்டையாடிய கயவர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அனலை கக்கியது. இந்த வழக்கில் 6 ஆண்டுகள் விசாரணை நிறைவடைந்த நிலையில் 9 பேரும் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்த விவகாரத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியில் வசதியான குடும்பங்களை இளைஞர்கள் கும்பல் பெண்களை காதல் ஆசை காட்டி அழைத்து வந்தனர். தங்களை நம்பி வந்த பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வந்தது அம்பலமானது. இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது இந்த விவகாரம் வெளியில் வந்தது. இதைத்தொடர்ந்து எதிர் கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. பெண்கள் அமைப்புகள் கண்டன போராட்டங்களை முன்னெடுத்தன.

சிபிஐ விசாரணை

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் முதலில் சபரி ராஜன்,வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பல தரப்பினரின் வேண்டுகோளை தொடந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் அப்பொழுது அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறை கைது செய்தது.

இதையடுத்து பொள்ளாச்சி வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் மீது கூட்டு சதி பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை கோவை மகளிர் நீதிமன்றம் விசாரணை செய்து வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் பொள்ளாச்சி வழக்கு விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகாமல் இருக்க மூடப்பட்ட நீதிமன்ற அறைகளில் விசாரணையானது நடத்தப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள், சிபிஐ அதிகாரிகள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் தவிர வேறு யாரும் வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்ற அறைகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. வழக்கில் கைதான 9 பேரும் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கின் தன்மை கருதி சாட்சிகளின் அடையாளம் வெளியில் தெரியாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நீதித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மொத்தம் 1500 பக்க குற்ற பத்திரிகை சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்டது. 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இருந்தனர். சபரி ராஜன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆப்பிள் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவை முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களாக இருந்தது. எந்தெந்த தேதிகளில் குற்றங்கள் நடந்தது என்பதை ஆதாரமாக காட்டுவதற்கான செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவை இருந்தது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து இருந்தனர். கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் வழக்கின் தீவிரத் தன்மை கருதி, நீதிமன்றம் 2019 முதல் பெயில் வழங்கவில்லை. இதுவே இந்த வழக்கில் சாட்சிகளில் ஒருவர் கூட பிறழ் சாட்சிகளாக மாறாததற்கு காரணம் என கூறப்படுகிறது.

அதிரடி தீர்ப்புள்

கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கி உள்ளார். இதில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடியாக தீர்ப்பை அறிவித்துள்ளார். இந்நிலையில் பகல் 12 மணி அளவில் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தரமோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாகவது, 376D கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டு உள்ளது, 3762N மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது உள்ளிட்ட இரண்டும் வன்முறை நிரூபிக்கப்பட்டு உள்ளதால், சாகும் வரை ஆயுள் தண்டனை , உள்ளிட்ட உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைத்து உள்ளோம். அதில் குறைந்தபட்ச தண்டனையை 20 ஆண்டுகள் உள்ளன. 12 மணிக்கு தண்டனை விபரங்கள் வழங்கப்படும் என கூறி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பரிசீலனையை வைத்து இருக்கிறோம். என குறிப்பிட்டுள்ளார்.