’பழைய ஓய்வூதிய திட்டத்தில் ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன?’ அன்புமணி!
”பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைப்பதே காலம் கடத்தும் செயல்தான் என்பதை கடந்த பிப்ரவரி மாதமே கூறியிருந்தேன்”

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் என்றழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படாது என்பதால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, 2003&ஆம் ஆண்டுக்கு முன் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வும், அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.